துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 16 March 2019 10:55 PM GMT (Updated: 16 March 2019 10:55 PM GMT)

ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.


* ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பொதுவான இடமான டேராடூனில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 172 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்து இருந்தது. 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 106.3 ஓவர்களில் 314 ரன்னில் ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக ரஹ்மாத் ஷா 98 ரன்னும், கேப்டன் ஆஷ்கர் ஆப்கான் 67 ரன்னும், ஹஸ்மத்துல்லா ஷகிதி 61 ரன்னும் எடுத்தனர். 142 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய அயர்லாந்து அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 12 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 22 ரன்கள் எடுத்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

* ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் கால்இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி 7-6 (7-3), 6-7 (7-9), 10-12 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜாமி செர்டானி-நிகோலஸ் மோன்ரோ இணையிடம் தோல்வி கண்டு வெளியேறியது.

* இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடக்க விழா ரத்து செய்யப்படுவதாகவும், அந்த விழாவுக்கு ஆகும் செலவு புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய துணை ராணுவ படை வீரர்களின் குடும்பத்துக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி அறிவித்து இருந்தது. இதன்படி ராணுவ பாதுகாப்பு நிதிக்கு ரூ.20 கோடியை வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. சென்னையில் வருகிற 23-ந் தேதி நடைபெறும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தின் போது ராணுவ உயர் அதிகாரிகளை அழைத்து இந்த நிதியை வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றன.

* ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி பாங்காக்கில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 16-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து 6 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரிகோம் விலகி இருக்கிறார். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராகுவதில் கவனம் செலுத்தும் பொருட்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய குத்துச்சண்டை அணியில் சோனியா, சரிதா தேவி உள்பட 20 பேர் இடம் பிடித்துள்ளனர்.



Next Story