துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 21 March 2019 10:30 PM GMT (Updated: 21 March 2019 8:46 PM GMT)

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரணை நடத்தி கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

* சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து போட்டியின் ‘நாக்-அவுட்’ சுற்று ஆட்டம் ஒன்றில் யுவென்டஸ் அணி, அட்லெடிகோ மாட்ரிட் அணியை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தின் போது ‘ஹாட்ரிக்’ கோல் அடித்த யுவென்டஸ் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ எதிரணியினரை நோக்கி ஆபாசமாக சைகை காட்டி சர்ச்சையில் சிக்கினார். இது குறித்து ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரணை நடத்தி கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

* 5-வது தெற்காசிய பெண்கள் கால்பந்து போட்டி நேபாளத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, போட்டியை நடத்தும் நேபாளத்தை எதிர்கொள்கிறது. தொடர்ந்து 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள இந்திய அணி மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

* கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் மே 26-ந் தேதி தொடங்குகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு போட்டிக்கான பரிசுத்தொகை 8 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவர்கள் தலா ரூ.14 கோடியே 16 லட்சத்து 86 ஆயிரத்தை தட்டிச் செல்வார்கள். மேலும் முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறுபவர்களுக்கு ரூ.36 லட்சமும், பிரதான சுற்றுக்கு முந்தைய தகுதி சுற்று ஆட்டத்தில் தோல்வி காண்பவர்களுக்கு ரூ.19 லட்சமும் கிடைக்கும் என்று போட்டி அமைப்பு குழு இயக்குனர் குய் பார்கெட் தெரிவித்தார்.

* ஆசிய கலப்பு அணிகள் பேட்மிண்டன் போட்டி ஹாங்காங்கில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் சீன தைபேயை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் சீன தைபேயிடம் தோல்வி கண்டது. இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 2-3 என்ற கணக்கில் சிங்கப்பூரிடம் தோல்வி கண்டு இருந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய இளம் வீராங்கனை அஷ்மிதா சாலிஹாவும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அருண் ஜார்ஜ்-சன்யம் சுக்லா ஜோடியும் வெற்றி கண்டன. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சவுரவ் வர்மாவும், பெண்கள் இரட்டையர் பிரிவில் ஆரத்தி சாரா சுனில்-ருதபர்னா பாண்டா ஜோடியும், கலப்பு இரட்டையர் பிரிவில் ஷிகா கவுதம்-ஷிக் ராமச்சந்திரன் இணையும் தங்கள் ஆட்டங்களில் தோல்வியை தழுவியது.

* உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினரை உற்சாகப்படுத்துவதற்காக ‘பாரத் ஆர்மி’ என்ற பெயரில் உலகம் முழுவதும் உள்ள இந்திய ரசிகர்கள் படை இங்கிலாந்துக்கு படையெடுக்க இருக்கிறது. இந்த வகையில் ஏறக்குறைய 8 ஆயிரம் இந்திய ரசிகர்கள் இங்கிலாந்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

* முன்னாள் உலக சாம்பியனான ஜெர்மனி அணி நட்புறவு கால்பந்து போட்டியில் செர்பியாவுடன் வோல்ப் ஸ்பர்க் நகரில் மோதியது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் புகுந்த இளம் வீரர்களை கொண்ட ஜெர்மனி அணி ஆட்டத்தை 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. செர்பியா அணியில் லுகா ஜோவிச்சும் (12-வது நிமிடம்), ஜெர்மனி அணியில் லியோன் கோரெட்ஸ்காவும் (69-வது நிமிடம்) கோல் போட்டனர். ஜெர்மனி அணியில் இருந்து மூத்த வீரர்கள் தாமஸ் முல்லர், போட்டெங், ஹம்மல்ஸ் ஆகியோர் பயிற்சியாளர் ஜோசிம் லோவினால் அதிரடியாக நீக்கப்பட்டதால் எழுந்த சர்ச்சைக்கு மத்தியில் இந்த ஆட்டம் நடந்தது.

* துபாயில் நடந்த 10 ஓவர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் லங்காஷிர் அணிக்கு எதிராக களம் இறங்கிய சுர்ரே அணி வீரர் வில் ஜாக்ஸ் 25 பந்துகளில் சதம் அடித்து பிரமிக்க வைத்தார். இதில் அவர் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 6 சிக்சர் விளாசியதும் அடங்கும். அவரது சதத்தின் (30 பந்தில் 8 பவுண்டரி, 11 சிக்சருடன் 105 ரன்) உதவியுடன் அந்த அணி 3 விக்கெட்டுக்கு 176 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய லங்காஷிர் அணி 10 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 81 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது.

Next Story