சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: சிந்து, சாய்னா 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்


சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: சிந்து, சாய்னா 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 10 April 2019 9:30 PM GMT (Updated: 10 April 2019 8:37 PM GMT)

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: சிந்து, சாய்னா 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

சிங்கப்பூர்,

சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-9, 21-7 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியாவின் லையனி அலெஸ்சாண்ட்ரா மைனகியை எளிதில் தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற சிந்துவுக்கு 27 நிமிடமே தேவைப்பட்டது. மற்றொரு ஆட்டத்தில் இந்திய நட்சத்திரம் சாய்னா நேவால் 21-16, 21-11 என்ற நேர்செட்டில் இந்தோனேஷிய வீராங்கனை யுலியா யோஸ்பின் சுசான்டோவை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-14, 21-6 என்ற நேர்செட்டில் தாய்லாந்தின் சுபான்யு விஹிங்சனோனை விரட்டியடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவை சேர்ந்த பிரனாய் 11-21, 21-16, 21-18 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் பிரைஸ் லிவெர்ட்சை சாய்த்து 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த ஆட்டம் 63 நிமிடம் நீடித்தது. இதேபோல் இந்திய வீரர்கள் காஷ்யப் 21-19, 21-14 என்ற நேர்செட்டில் டென்மார்க்கின் ரஸ்முஸ் ஜெம்கேவையும், ஸ்ரீகாந்த் 21-17, 21-18 என்ற நேர்செட்டில் தாய்லாந்தின் சித்திகோம் தமாசினையும் வெளியேற்றி அடுத்த சுற்றுக்குள் கால் பதித்தனர். இந்திய வீரர் சாய் பிரனீத் 21-19, 14-21, 20-22 என்ற செட் கணக்கில் ஜப்பான் வீரர் கென்டோ மொமோட்டோவிடம் போராடி தோல்வி கண்டு வெளியேறினார்.

Next Story