சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதிக்கு சிந்து முன்னேற்றம் சாய்னா, ஸ்ரீகாந்த் வெளியேற்றம்


சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதிக்கு சிந்து முன்னேற்றம் சாய்னா, ஸ்ரீகாந்த் வெளியேற்றம்
x
தினத்தந்தி 12 April 2019 10:30 PM GMT (Updated: 12 April 2019 9:22 PM GMT)

சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.

சிங்கப்பூர்,

சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-13, 17-21, 21-14 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள கா யான்யனை (சீனா) தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 59 நிமிடம் நடந்தது. அரைஇறுதியில் பி.வி.சிந்து, முன்னாள் உலக சாம்பியன் நஜோமி ஒகுஹராவை (ஜப்பான்) எதிர்கொள்கிறார். மற்றொரு கால்இறுதியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 8-21, 13-21 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் நஜோமி ஒகுஹராவிடம் (ஜப்பான்) தோற்று நடையை கட்டினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீரர் கென்டோ மோமோட்டா (ஜப்பான்) 21-18, 19-21, 21-9 என்ற செட் கணக்கில் இந்தியாவின் ஸ்ரீகாந்த்தை வீழ்த்தி அரைஇறுதியை எட்டினார். மோமோட்டாவுக்கு எதிராக ஸ்ரீகாந்த் தொடர்ச்சியாக சந்தித்த 9-வது தோல்வி இதுவாகும். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா 10-21, 21-15, 15-21 என்ற செட் கணக்கில் 4-ம் நிலை வீரரான ஷோ டைன் சென்னிடம் (சீன தைபே) வீழ்ந்தார். இந்ததொடரில் சிந்துவை தவிர மற்ற இந்தியர்கள் அனைவரும் தோல்வி கண்டு வெளியேறி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story