துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 13 May 2019 10:30 PM GMT (Updated: 13 May 2019 10:17 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில், வீரர்கள் கலவை சிறப்பாக இருப்பதாக ஜான்டி ரோட்ஸ் தெரிவித்தார்.


* பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பிரிஸ்டலில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. இந்த போட்டி தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்து இருந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் காய்ச்சல் காரணமாக 2-வது போட்டியில் விளையாடவில்லை. தற்போது அவருக்கு தட்டம்மை நோய் பாதிப்பு இருக்குமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் முகமது அமிரின் உலக கோப்பை கனவு சிக்கலாகி இருக்கிறது.

* இந்தியா-ஆஸ்திரேலியா ‘ஏ’ ஆக்கி அணிகள் இடையிலான 2-வது ஆட்டம் ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த்தில் நேற்று நடந்தது. ஆஸ்திரேலிய அணி 21-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது. அந்த அணி வீரர் கிர்ரன் அருணாசலம் இந்த கோலை அடித்தார். 56-வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் ஹர்மன்பிரீத் சிங் பதில் கோல் திருப்பினார். இதனால் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இரு அணிகள் இடையிலான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வென்று இருந்தது. அடுத்து இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் நாளை நடக்கிறது.

* தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஜான்டி ரோட்ஸ் அளித்த ஒரு பேட்டியில், ‘இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் வீரர்கள் கலவை சிறப்பாக இருக்கிறது. அதேநேரத்தில் தரவரிசையில் 6 இடங்களுக்குள் உள்ள மற்ற அணிகளும் சிறப்பானவையாகும். உலக கோப்பை போட்டியில் சில வலுவான அணிகள் பங்கேற்கிறது. குறிப்பிட்ட நாளில் ஆடும் லெவன் அணி தேர்வு மற்றும் சீதோஷ்ண நிலையை பொறுத்தே ஆட்டத்தின் முடிவு இருக்கும். தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள வெஸ்ட்இண்டீஸ் அணி கூட சமீபகாலமாக நன்றாகவே விளையாடுகிறது. எந்தவொரு ஆட்டத்திலும் குறிப்பிட்ட ஒரு அணி நிச்சயம் வெற்றி பெறும் என்று சொல்லிவிட முடியாது. உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு பல அணிகளுக்கு இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.


Next Story