துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 14 May 2019 10:27 PM GMT (Updated: 14 May 2019 10:27 PM GMT)

இந்தியாவை சேர்ந்த 51 வயதான பெண் நடுவர் லட்சுமி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் போட்டி நடுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* ஒலிம்பிக் மற்றும் உலக தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற தென்ஆப்பிரிக்க வீராங்கனை கேஸ்டர் செமன்யா ‘ஹார்மோன்’ சோதனையில் தோல்வி அடைந்ததால் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அவருக்கு உலக தடகள சம்மேளனத்தின் புதிய விதிமுறைப்படி தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்து அவர் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் செய்த அப்பீல் தோல்வியில் முடிந்தது. தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்யப்படும் என்று தென்ஆப்பிரிக்க விளையாட்டு துறை அறிவித்துள்ளது.

* 12 அணிகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் உள்ள 5 நகரங்களில் ஜூன் 14-ந் தேதி முதல் ஜூலை 7-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் கலவரம் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க பிரேசில் அரசு முடிவு செய்துள்ளது. போட்டி நடைபெறும் ஸ்டேடியத்தில் 10 ஆயிரம் பாதுகாப்பு படையினரை பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஏற்கனவே கலவரங்களில் ஈடுபட்ட குற்ற பின்னணி கொண்ட ரசிகர்கள் ஸ்டேடியத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

* சியட் நிறுவனம் சார்பில் கிரிக்கெட் விருது வழங்கும் விழா மும்பையில் நடந்தது. இதில் இந்த ஆண்டுக்கான சிறந்த பேட்ஸ்மேனுக்கான விருது இந்திய அணி கேப்டன் விராட்கோலிக்கும், சிறந்த வீராங்கனைக்கான விருது இந்திய வீராங்கனை மந்தனாவுக்கும் வழங்கப்பட்டது. சிறந்த பந்து வீச்சாளருக்கான விருது இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கும், ஒரு நாள் கிரிக்கெட்டில் சிறந்த வீரருக்கான விருது இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கும் கிடைத்தன. வாழ்நாள் சாதனையாளர் விருது முன்னாள் வீரர் மொகிந்தர் அமர்நாத்துக்கு வழங்கப்பட்டது.

* இந்தியாவை சேர்ந்த 51 வயதான பெண் நடுவர் லட்சுமி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் போட்டி நடுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் சர்வதேச போட்டியில் உடனடியாக போட்டி நடுவராக செயல்பட முடியும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

* ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான தென் மண்டல குரூப் (இ பிரிவு) சுற்றில் வங்காளதேச தலைநகர் டாக்காவில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.அணி, அபாகானி லிமிடெட் டாக்கா (வங்காளதேசம்) அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

* இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனை கமிட்டி உறுப்பினராக உள்ளார். அத்துடன் அவர் ஐ.பி.எல். போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராகவும் இருக்கிறார். தெண்டுல்கர் இரட்டை ஆதாயம் பெறும் வகையில் பதவி வகிப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்திய கிரிக்கெட் வாரிய குறை தீர்ப்பு அதிகாரியான முன்னாள் நீதிபதி டி.கே. ஜெயின், தெண்டுல்கருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த நிலையில் நேற்று டெல்லியில் குறை தீர்ப்பு அதிகாரி டி.கே.ஜெயினை, தெண்டுல்கர் சந்தித்து தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். இந்த விசாரணை வருகிற 20-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.


Next Story