துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 16 May 2019 9:30 PM GMT (Updated: 16 May 2019 9:18 PM GMT)

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ்சில் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.


* கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ்சில் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் இருந்து 2 முறை சாம்பியனான ரஷிய வீராங்கனை மரியா ஷரபோவா விலகி இருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதத்தில் தோள்பட்டை காயத்துக்கு ஆபரேஷன் செய்த ஷரபோவா முழு உடல் தகுதியை எட்டாததால் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பிரெஞ்ச் ஓபன் போட்டியை தவறவிடுவது வருத்தம் அளிப்பதாகவும், சில சமயங்களில் நல்ல முடிவுகள் எடுப்பதுகூட கடினமானதாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

* கடந்த பிப்ரவரி மாதம் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்கள், இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க விசா வழங்க அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் சர்வதேச போட்டிகளை இந்தியாவில் நடத்த சிக்கல் எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு மத்திய அரசிடம், இந்திய ஒலிம்பிக் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தும் என்று இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச்செயலாளர் ராஜீவ் மேக்தா தெரிவித்துள்ளார்.

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வெங்சர்க்கார் அளித்த ஒரு பேட்டியில், ‘உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சிரமம் இன்றி அரை இறுதிக்கு முன்னேறும். தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். 3-வது இடத்திற்கு விராட் கோலி இருக்கிறார். 4-வது வரிசையில் லோகேஷ் ராகுலை இறக்கினால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்தாகும். அவர் அந்த வரிசையில் திறம்பட செயல்படக்கூடியவர். அவர் சிறப்பு பேட்ஸ்மேன். தொடக்க விக்கெட்டுகள் விழுந்தால்கூட அவரால் தாக்குப்பிடித்து விளையாட முடியும். இங்கிலாந்தின் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். கடந்த ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் இதே தருணத்தில் ஆடியது நமக்கு ஒரு பலமாகும். இந்திய அணியை தவிர்த்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் நிச்சயம் அரை இறுதிக்கு முன்னேறும். 4-வது அணி எது என்பதை இப்போது கணிக்க முடியாது. யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் ஆடுகளத்தின் தன்மையை கவனமாக கணித்து அதற்கு தகுந்தபடி செயல்பட வேண்டியது முக்கியமானதாகும்’ என்று தெரிவித்தார்.


Next Story