உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் வென்று சாதனை


உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் வென்று சாதனை
x
தினத்தந்தி 27 May 2019 10:18 PM GMT (Updated: 27 May 2019 10:18 PM GMT)

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் வென்று சாதனை படைத்தார்.

புதுடெல்லி,

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி 246.3 புள்ளிகள் குவித்து புதிய உலக சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கத்தையும் கைப்பற்றினார். ரஷிய வீரர் செர்னோசோவ் அர்டெம் 243.8 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கமும், சீனா வீரர் பாங் வெய் 220.7 புள்ளிகள் பெற்று வெண்கலப்பதக்கமும் பெற்றனர். மற்றொரு இந்திய வீரர் ரிஸ்வி ஷாஜர் 5-வது இடம் பெற்றார். தங்கம் வென்றதன் மூலம் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 17 வயதான சவுரப் சவுத்ரி உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி, உலக கோப்பை போட்டி, இளையோர் ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு போட்டி, ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி ஆகியவற்றில் தங்கப்பதக்கம் வென்ற ஒரே இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் போட்டியின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை ராஹி சர்னோபாத் 37 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை வென்றார். அத்துடன் 2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிக்கான கோட்டாவையும் உறுதி செய்தார். இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்த போட்டியில் இந்தியா இதுவரை 3 தங்கம் வென்று பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.


Next Story