பேட்மிண்டன்: தங்கம் குவிக்கும் தாரகை


பேட்மிண்டன்: தங்கம் குவிக்கும் தாரகை
x
தினத்தந்தி 3 Aug 2019 11:10 AM GMT (Updated: 3 Aug 2019 11:10 AM GMT)

மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் ஜெர்லின் அனிகா. காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி மாணவியான இவர், இந்திய அணிக்காக சீனாவில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டியில் கலந்து கொண்டு ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களுடன், சாம்பியன் பட்டத்தையும் தன்வசப்படுத்தியிருக்கிறார்.

ஜெர்லின் அனிகா, ஏற்கனவே 2 முறை இந்திய அணிக்காக விளையாடியிருக்கிறார். அப்போது பதக்கம் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் மனம் தளராமல் போராடி தற்போது சீனாவில் சாதித்திருக்கிறார். அவரது சாதனைகளுக்கு துணை நிற்கும் அவரது தந்தை ஜெயரட்சகனுடன் அவரை சந்தித்தோம். நாம் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் சைகை முறையில் சளைக்காமல் அவரது தந்தையிடம் பதிலளிக்க, தந்தையோ நமக்கு அதை விவரித்தார்.

உங்களுக்கு பேட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம் வந்தது எப்படி?

என் அப்பா கிரிக்கெட்டில் அதிக ஆர்வம்கொண்டவர். தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அவரது நண்பர்களில் சிலர் பேட்மிண்டன் விளையாடுவார்கள். நான் 5-ம் வகுப்பு படித்தபோது, ஒருமுறை என் தந்தையுடன் மைதானத்திற்கு சென்றிருந்தேன். அங்கே எனது தந்தையின் நண்பர்களில் சிலர் ஒருபுறம் பேட்மிண்டனும், இன்னொரு புறம் கிரிக்கெட்டும் விளையாடிக் கொண்டிருந் தார்கள். அதில் நான் பேட்மிண்டன் போட்டியை உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். இதனை என் தந்தை கவனித்தார். வீட்டிற்கு வந்த பிறகு என்னிடம் பேட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம் இருக் கிறதா என்று கேட்டார். ஆமாம் என்றேன். அன்று ஏற்பட்ட ஆர்வம் தான், இன்றுவரை குறையாமல் என்னை பல சாதனைகளை செய்யவைக்கிறது.

தொடக்கத்தில் உங்கள் விளையாட்டுத் திறன் எப்படி இருந்தது?

தொடக்கத்தில் நூற்றுக்கு மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு ஒரு பரிசு கூட வாங்காமல் இருந்தேன். ஆனாலும் நான் சோர்ந்துபோகவில்லை. என் தோல்விக்கு என்ன காரணம் என்று வீட்டிற்கு வந்ததும் ஆராய்வேன். முதலில் மாற்றுத்திறனாளிகளுடன் விளையாடாமல் சராசரி வீரர், வீராங்கனைகளுடன் விளையாடினேன். அதில் இருந்து பல நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு போட்டியையும் வெற்றியாக மாற்றும் முயற்சிகளை மேற்கொண்டேன். அதன்பின்னர் வெற்றி என்வசப்பட்டது.

தினமும் எத்தனை மணி நேரம் பயிற்சி மேற்கொள்வீர்கள்?

விளையாட தொடங்கியதில் இருந்து சரவணன் என்பவர் தான் என்னுடைய பயிற்சியாளர். அவருடைய வழிகாட்டுதலின் படி தான் தற்போது வரை விளையாடிக்கொண்டிருக்கிறேன். காலை 5 மணி முதல் 8 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 10 மணி வரையும் பயிற்சி மேற்கொள்கிறேன். தினமும் 9 மணி நேரமாவது பயிற்சி செய்கிறேன்.

உங்கள் குடும்பத்தினரை பற்றி..?

அப்பா, ஜெயரட்சகன் சுயதொழில் செய்து வருகிறார். அம்மா லீமாரோஸ்லின், இல்லத்தரசி. அண்ணன் ஆகாஷ் கல்லூரியில் படித்து வரு கிறார். நான், மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறேன். எனது தாத்தா பாட்டி இருவரும் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக வேலை பார்த்தவர்கள். அதன் காரணமாக என்னையும் அரசு பள்ளியில் சேர்த்து விட்டார்கள். பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் எனக்கு உற்சாகம் தருகிறார்கள்.

நான் கொஞ்ச நேரம் படித்தாலும் நன்றாக புரிந்து கொள்வேன். அதனால், படிப்பு பற்றி எந்த கவலையும் கிடையாது. விளையாட்டு தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். அதிலும் ஒரு கை பார்த்து விடுவேன். போட்டியில் இறங்கும் முன் அமைதியாக இருப்பேன். இறங்கி விட்டால் வெற்றி மட்டும் தான் இலக்கு. இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் விளையாடி உள்ளேன். மலேசியா, ஜெர்மனி போன்ற வெளிநாடுகளிலும் விளையாடி இருக்கிறேன். எல்லா போட்டிகளுக்கும் என்னுடன் என் தந்தையும் வந்து விடுவார். அவர் அருகில் இருந்து உற்சாகப்படுத்துவது எனக்கு கூடுதல் சக்தியை அளிக்கும்.

இந்திய அணிக்காக விளையாடிய அனுபவம்..?

2017-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு, இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டேன். மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்தவர்களில் நான் மட்டுமே தேர்வு செய்யப்பட்டேன். அது மிகவும் மகிழ்ச்சியான தருணமாக இருந்தது. இந்திய அணிக்காக விளையாடுவேன் என்று கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை. அந்த போட்டியில் கலந்துகொண்டு 5-வது இடத்தை பிடித்தேன். 2018-ல் நடந்த சர்வதேச போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி 2 வெள்ளி, 1 வெண்கல பதக்கத்தை பெற்றேன். தற்போது சீனாவில் நடந்த போட்டியில் தங்கப்பதக்கத்தை பெற்றதுடன், 2 வெள்ளி, ஒரு வெண்கலத்தையும் பெற்றிருக்கிறேன்.

என்னுடைய ரோல்மாடல் பி.வி.சிந்து. அவரை போன்று இந்திய அணிக்கு விளையாடி பெருமை சேர்க்க வேண்டும் என்பது ஆசை. அவருடைய விளையாட்டுகளை டி.வி.யில் பார்த்தால் அதனை முழுமையாக கவனிப்பேன். அவருடைய ஒவ்வொரு அசைவையும் முன்மாதிரியாக எடுத்துக்கொள்வேன்.

மறக்க முடியாத பாராட்டுகள்..?

சீனாவில் தங்கம் வென்ற என்னை நடிகர் விஜய்சேதுபதி நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது அவர் நீ இன்னும் நிறைய சாதிக்க வேண்டும். இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார். அது என்னால் மறக்க முடியாதது. அதுபோல், ஐதராபாத்தில் நடந்த போட்டியில் கலந்துகொள்ள சென்றபோது பி.வி.சிந்துவும் என்னை பாராட்டினார்.

உங்களின் அடுத்த இலக்கு..?

ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி தங்கத்தை பெற வேண்டும் என்பது தான் என் இலக்கு. அதை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கிறேன். ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தமிழகத்திற்கும் பெருமை சேர்ப்பேன். சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்றால் சாதாரண வீராங் கனைகளுக்கு கிடைக்கும் மரியாதை எங்களுக்கு கிடைப்பதில்லை. மாற்றுத்திறனாளிகள் போட்டியில் சாதிப்பது என்பது பெரிய விஷயம். எல்லோரையும் சரிசமமாக பாராட்ட வேண்டும் என்பது தான் எங்களின் கோரிக்கை. ஒவ்வொரு வருடமும் என்னுடைய செலவு மட்டும் ரூ.8 லட்சத்தை தாண்டிவிடுகிறது. நான் மேலும் சாதிக்கும் விதத்தில் அரசு ஊக்கத்தொகை வழங்கவேண்டும்.

அனிகாவின் ஆசைகள் நிறைவேறட்டும்!

Next Story