ஸ்டீவன் சுமித்துக்கு, ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் பாராட்டு


ஸ்டீவன் சுமித்துக்கு, ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் பாராட்டு
x
தினத்தந்தி 7 Aug 2019 11:30 PM GMT (Updated: 7 Aug 2019 11:30 PM GMT)

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித்தை, முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் பாராட்டியுள்ளார்.


* ஆஷஸ் முதலாவது டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித்தை, ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் பாராட்டியுள்ளார். ‘நீண்ட இடைவெளிக்கு பிறகு டெஸ்டில் களம் கண்ட ஸ்டீவன் சுமித்துக்கு ரசிகர்களின் கேலியும், கிண்டலும் கடினமானதாக இருந்தது. அதையும் தாண்டி அவர் சாதித்து இருக்கிறார் என்றால் அது அவரது மனவலிமையையே காட்டுகிறது’ என்று மெக்ராத் சென்னையில் நேற்று தெரிவித்தார்.

* உருகுவே கால்பந்து அணியின் முன்னணி வீரராக வலம் வந்த 40 வயதான டியாகோ பார்லன், சர்வதேச போட்டியில் ஓய்வு பெற்றாலும் கிளப் கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து ஆடி வந்தார். இந்த நிலையில் தனது 21 ஆண்டு கால தொழில்முறை கால்பந்து போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக நேற்று அறிவித்தார்.

* சொந்த மண்ணில் வருகிற 14-ந்தேதி முதல் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி விளையாட உள்ள நிலையில் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஹதுருசின்காவை இலங்கை கிரிக்கெட் வாரியம் நேற்றிரவு அதிரடியாக இடைநீக்கம் செய்தது. அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளராக முன்னாள் வீரர் ருமேஷ் ரத்னயாகே நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

* இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆலி ஸ்டோன் முதுகுவலி காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 2-வது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.

* கிரிக்கெட் தொடர்பான அமைப்பில் ஒரே நேரத்தில் இரட்டை ஆதாய பதவி வகிப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டுக்கு, கிரிக்கெட் வாரியத்தின் நன்னடத்தை அதிகாரி டி.ஜெயின் நோட்டீஸ் அனுப்பி இருப்பதற்கு மற்றொரு முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி அதிருப்தி அடைந்துள்ளார். ‘ இந்திய கிரிக்கெட்டுக்குள் புதிய கலாசாரம் ஒன்று புகுந்துள்ளது. அதன் பெயர் இரட்டை ஆதாய விவகாரம். இனி இந்திய கிரிக்கெட்டுக்கு கடவுள் தான் உதவ வேண்டும்’ என்று கங்குலி டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story