கனடாவில் குளோபல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி


கனடாவில் குளோபல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி
x
தினத்தந்தி 8 Aug 2019 9:42 PM GMT (Updated: 8 Aug 2019 9:42 PM GMT)

* குளோபல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. யுவராஜ்சிங் தலைமையிலான டோராண்டோ நேஷனல்ஸ்-மான்ட்ரியல் டைகர்ஸ் அணிகள் மோதின.

* குளோபல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இந்த ஆட்டம் 2 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. அதற்கான காரணம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை. சம்பள பிரச்சினை காரணமாக இரு அணி வீரர்களும் ஓட்டலில் இருந்து போட்டி நடைபெறும் இடத்துக்கு வர பஸ்சில் ஏற மறுத்து போராட்டம் நடத்தியதால் தான் காலதாமதமாக போட்டி தொடங்கியதாக தற்போது தெரியவந்துள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கு மட்டுமல்ல மற்ற அணியினருக்கும் இதே சம்பள பிரச்சினை எழுந்துள்ளது.

* 2019-2020-ம் ஆண்டுக்கான ஒப்பந்த வீரர்கள் பட்டியலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் மூத்த வீரர்கள் சோயிப் மாலிக், முகமது ஹபீஸ் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

* சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் சாதிக்கும் வீரர், வீராங்கனைகள் மற்றும் அவர்களது பயிற்சியாளர்களுக்கு ஆண்டு தோறும் தேசிய விளையாட்டு தினத்தன்று (ஆகஸ்டு 29-ந் தேதி) கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சார்யா ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. தேசிய விளையாட்டு விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய 12 பேர் கொண்ட கமிட்டியை மத்திய விளையாட்டு அமைச்சகம் நேற்று அறிவித்தது. சுப்ரீம் கோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி முகுந்தகாம் ஷர்மா தலைமையிலான இந்த தேர்வு குழுவில் குத்துச்சண்டை போட்டியில் 6 முறை உலக சாம்பியான மேரிகோம், இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாய்சூங் பூட்டியா, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா, முன்னாள் சர்வதேச தடகள வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

* டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் செப்டம்பர் 14 மற்றும் 15-ந் தேதிகளில் நடக்கிறது. சமீபத்தில் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவித்தது. இதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது. எனவே பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் டேவிஸ் கோப்பை போட்டியை இரு நாடுகளுக்கும் பொதுவான ஒரு இடத்தில் நடத்தும்படி சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தை கேட்டுக் கொள்ள இந்திய டென்னிஸ் சங்கம் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

Next Story