புரோ கபடி லீக்: உ.பி.யோத்தா அணியிடம் ஜெய்ப்பூர் அதிர்ச்சி தோல்வி


புரோ கபடி லீக்: உ.பி.யோத்தா அணியிடம் ஜெய்ப்பூர் அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 19 Aug 2019 11:57 PM GMT (Updated: 19 Aug 2019 11:57 PM GMT)

புரோ கபடி லீக் தொடரில் உ.பி.யோத்தா அணியிடம் ஜெய்ப்பூர் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

சென்னை,

புரோ கபடி லீக் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 24-31 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தா அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.

7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற 49-வது லீக் ஆட்டத்தில் மும்பை-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன. முதலில் அரியான ஸ்டீலர்ஸ் மும்பையை ‘ஆல்-அவுட்’ செய்து அசத்தியது. ஆட்டத்தின் முதல் பாதியில் அரியான ஸ்டீலர்ஸ் அணி 16-8 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தது.

பிற்பாதியில் சரிவில் இருந்து மீண்டு வந்த மும்பை அணி அரியானாவை ‘ஆல்-அவுட்’ செய்து பதிலடி கொடுத்தது. திரில்லிங்கான இந்த ஆட்டத்தின் முடிவில் அரியான ஸ்டீலர்ஸ் 30-27 என்ற புள்ளி கணக்கில் மும்பையை சாய்த்தது. 9-வது ஆட்டத்தில் ஆடிய அரியானா அணி பெற்ற 5-வது வெற்றி இதுவாகும். அந்த அணி 4 ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ளது. 9-வது ஆட்டத்தில் களம் கண்ட மும்பை அணி சந்தித்த 5-வது தோல்வி இது. 4 ஆட்டத்தில் வெற்றி கண்டுள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் சந்தித்தன. இதில் முதல் பாதியில் உ.பி.யோத்தா அணி 16-10 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது. பிற்பாதியில் ஜெய்ப்பூர் அணி நெருக்கடி அளித்தாலும் வெற்றியை நெருங்க முடியவில்லை. முடிவில் ஜெய்ப்பூர் அணி 24-31 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. 8-வது ஆட்டத்தில் ஆடிய ஜெய்ப்பூர் அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். 6 ஆட்டத்தில் வெற்றி கண்டுள்ளது. 9-வது ஆட்டத்தில் ஆடிய உ.பி.யோத்தா அணி பெற்ற 3-வது வெற்றி இது. 4 தோல்வி, 2 டையும் கண்டுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) ஒய்வு நாளாகும். நாளை நடைபெறும் ஆட்டத்தில் புனேரி பால்டன்-பெங்களூரு புல்ஸ் (இரவு 7.30), தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு8.30) அணிகள் மோதுகின்றன.

Next Story