பாபுனா கோப்பை கிரிக்கெட் போட்டி: நாக்பூரில் செப்டம்பர் 5-ந் தேதி தொடக்கம்


பாபுனா கோப்பை கிரிக்கெட் போட்டி: நாக்பூரில் செப்டம்பர் 5-ந் தேதி தொடக்கம்
x
தினத்தந்தி 26 Aug 2019 11:30 PM GMT (Updated: 26 Aug 2019 11:30 PM GMT)

பாபுனா கோப்பை கிரிக்கெட் போட்டி நாக்பூரில் செப்டம்பர் 5-ந் தேதி தொடங்குகிறது.


* சுவிட்சர்லாந்தில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை சிந்து பெற்றார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சாய் பிரனீத் வெண்கலப்பதக்கம் வென்றார். இதனால் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் 36 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை தனதாக்கினார். தங்கம் வென்ற சிந்துவுக்கு ரூ.20 லட்சமும், வெண்கலம் கைப்பற்றிய சாய் பிரனீத்துக்கு ரூ.5 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என்று இந்திய பேட்மிண்டன் சம்மேளனம் அறிவித்துள்ளது.

* பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் டைரக்டராக இருக்கும் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணை தலைவராக இருந்தார். அவர் இரட்டை ஆதாயம் பெறும் வகையில் பதவி வகிப்பதாக மத்தியபிரதேச கிரிக்கெட் சங்க ஆயுட்கால உறுப்பினர் சஞ்சீவ் மேத்தா புகார் தெரிவித்து இருந்தார். இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நன்னடத்தை அதிகாரி டி.கே.ஜெயின் அனுப்பி இருந்த நோட்டீசுக்கு டிராவிட் விளக்கம் அளித்து இருந்தார். இந்த நிலையில் அவர் மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைமையகத்தில் நன்னடைத்தை அதிகாரி முன்னிலையில் செப்டம்பர் 26-ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

* பாபுனா கோப்பை கிரிக்கெட் போட்டி நாக்பூரில் செப்டம்பர் 5-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான மும்பை அணியை மும்பை கிரிக்கெட் சங்கம் நேற்று அறிவித்தது. அணியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கரின் மகனான 19 வயது அர்ஜூன் தெண்டுல்கர் இடம் பிடித்துள்ளார். மும்பை அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

* திரிவேனி ஆக்கி லீக் போட்டி சென்னையை அடுத்த ஒரகடத்தில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி (சென்னை) அணி 4-0 என்ற கோல் கணக்கில் மேஜர் டாக்டர் ஜோன்ஸ் ஆக்கி அகாடமியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

* விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூரில் செப்டம்பர் 24-ந் தேதி முதல் அக்டோபர் 16-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக கிரிக்கெட் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணை செயலாளர் ஆர்.ஐ.பழனி தெரிவித்துள்ளார்.

* ஹாங்காங் கிரிக்கெட் அணி வீரர்கள் இர்பான் அகமது, நதீம் அகமது, ஹசீப் அம்ஜத் ஆகியோர் மீது கிரிக்கெட் சூதாட்ட புகார் (மேட்ச் பிக்சிங்) எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்திய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் குற்றச்சாட்டில் உண்மை இருப்பது தெரியவந்ததால் சகோதரர்களான இர்பான் அகமது, நதீம் அகமது ஆகியோருக்கு ஆயுட்கால தடையும், ஹசீப் அம்ஜத்துக்கு 5 ஆண்டு காலம் தடையும் விதித்துள்ளது.

* 19 வயதுக்கு உட்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் பேட்ஸ்மேன் இஜாஸ் அகமது நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது பதவி காலம் 3 ஆண்டுகள் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.


Next Story