புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணியின் தோல்வி தொடருகிறது


புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணியின் தோல்வி தொடருகிறது
x
தினத்தந்தி 3 Sep 2019 1:21 AM GMT (Updated: 3 Sep 2019 1:21 AM GMT)

புரோ கபடி லீக் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 30-35 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.

பெங்களூரு,

7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூருவில் நேற்றிரவு நடைபெற்ற 72-வது லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்-தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி, மாறி புள்ளிகள் எடுத்தன. முதல் பாதியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 18-14 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தது.

சிறப்பாக செயல்பட்ட தெலுங்கு டைட்டன்ஸ் அணி 2-வது பாதியில் தமிழ் தலைவாஸ் அணியை ஆல்-அவுட் செய்தது. திரில்லிங்கான இந்த ஆட்டத்தின் முடிவில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 35-30 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலை வாசை சாய்த்தது. 12-வது ஆட்டத்தில் ஆடிய தெலுங்கு டைட்டன்ஸ் அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். 13-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணி சந்தித்த 8-வது தோல்வி இதுவாகும்.

முன்னதாக நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் சந்தித்தன. இதில் முதல் பாதியில் அரியானா அணி, புனேரி பால்டனை ஆல்-அவுட் செய்ததுடன் 18-11 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது. தடுமாற்றம் கண்ட புனேரி பால்டன் அணி கடைசி வரை அரியானா அணியை நெருங்க முடியவில்லை. முடிவில் அரியானா ஸ்டீலர்ஸ் 41-27 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை வீழ்த்தியது. 12-வது ஆட்டத்தில் ஆடிய புனேரி பால்டன் அணி பெற்ற 7-வது தோல்வியாகும். 12-வது ஆட்டத்தில் ஆடிய அரியானா அணி பெற்ற 8-வது வெற்றி இதுவாகும்

இன்று (செவ்வாய்க்கிழமை) ஓய்வு நாளாகும். நாளை நடைபெறும் ஆட்டங்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-தபாங் டெல்லி (இரவு 7.30 மணி), பெங்களூரு புல்ஸ்-பாட்னா பைரட்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story