உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதி சுற்று போட்டிக்கு இந்திய வீரர், வீராங்கனைகள் 14 பேர் தகுதி


உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதி சுற்று போட்டிக்கு இந்திய வீரர், வீராங்கனைகள் 14 பேர் தகுதி
x
தினத்தந்தி 4 Sep 2019 11:56 PM GMT (Updated: 4 Sep 2019 11:56 PM GMT)

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதி சுற்று போட்டிக்கு இந்திய வீரர், வீராங்கனைகள் 14 பேர் தகுதி பெற்றுள்ளனர்.


* உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதி சுற்று போட்டி சீனாவில் நவம்பர் 17-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கு இந்திய வீரர், வீராங்கனைகள் 14 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதில் சமீபத்தில் பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் தங்கம் வென்ற இளவேனில், மானுபாகெர், அபிஷேக் வர்மா, சவுரப் சவுத்ரி ஆகியோரும் அடங்குவர்.

* இந்தியா ஏ- தென்ஆப்பிரிக்கா ஏ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. இதில் தென்ஆப்பிரிக்கா ஏ அணி முதலில் பேட் செய்த போது 22-வது ஓவரில் மழை குறுக்கிட்டது. நீண்ட நேரம் மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டம் 25 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 25 ஓவர்களில் அந்த அணி ஒரு விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து வி.ஜே.டி. முறைப்படி இந்திய ஏ அணி 25 ஓவர்களில் 193 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய இந்திய ஏ அணி 7.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 56 ரன்கள் எடுத்த போது மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டது. அப்போது ஷிகர் தவான் 34 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்த ஆட்டம் இன்று தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், 2001-ம்ஆண்டு கொல்கத்தாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் ரிக்கிபாண்டிங், கில்கிறிஸ்ட், ஷேன் வார்னே ஆகியோரின் விக்கெட்டுகளை வரிசையாக சாய்த்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். டெஸ்டில் இந்திய வீரர் ஒருவரின் முதல் ஹாட்ரிக் நிகழ்வு அது தான். இதில் கில்கிறிஸ்டுக்கு பந்து முதலில் பேட்டில் உரசிக்கொண்டு அதன் பிறகு தான் காலுறையில் பட்டது டி.வி. ரீப்ளேயில் தெரிந்தது. அந்த சமயத்தில் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் இருந்திருந்தால் தப்பியிருப்பேன் என்று கில்கிறிஸ்ட் தற்போது டுவிட்டரில் சூசகமாக கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஹர்பஜன்சிங், ‘முதல் பந்தில் அவுட் ஆகாவிட்டாலும் நீங்கள் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து இருப்பீர்களா? இது பற்றி எல்லாம் பிதற்றுவதை நிறுத்தி விடு நண்பா....ஓய்வு பெற்ற பிறகு அர்த்தமுள்ள வகையில் பேசுவீர்கள் என்று நினைத்தேன். ஆனால் சில விஷயங்கள் மாறவே மாறாது என்பதற்கு நீங்கள் தான் உதாரணம். எப்போதும் அழுதுகிட்டு...” என்று கூறியுள்ளார்.


Next Story