வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர் பிராத்வெயிட்டின் பந்து வீச்சில் சந்தேகம்


வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர் பிராத்வெயிட்டின் பந்து வீச்சில் சந்தேகம்
x
தினத்தந்தி 8 Sep 2019 11:34 PM GMT (Updated: 8 Sep 2019 11:34 PM GMT)

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர் பிராத்வெயிட்டின் பந்து வீச்சில் சந்தேகம் எழுந்துள்ளது.


வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் கிரேக் பிராத்வெய்ட் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளரும் ஆவார். சமீபத்தில் கிங்ஸ்டனில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டின் போது அவரது பந்து வீச்சு விதிமுறைக்கு புறம்பாக சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்ததாக நடுவர்கள் புகார் அளித்துள்ளனர். அவர் பந்து வீச்சு சர்ச்சையில் சிக்குவது இது 2-வது முறையாகும். வருகிற 14-ந்தேதிக்குள் அவர் தனது பந்து வீச்சை சோதனைக்கு உட்படுத்த ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது.

பார்முலா1 கார்பந்தயம்: மொனாக்கோ வீரர் வெற்றி

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 14-வது சுற்றான இத்தாலி கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள மோன்ஸா ஓடுதளத்தில் நேற்று நடந்தது. இதில் 306.72 கிலோமீட்டர் பந்தய தூரத்தை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் மின்னல் வேகத்தில் பாய்ந்தனர். இதில் மொனாக்கோ வீரர் சார்லஸ் லெக்லெர்க் (பெராரி அணி) 1 மணி 15 நிமிடம் 26.665 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்று 25 புள்ளிகளை தட்டிச் சென்றார். பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் 2-வதாகவும், நடப்பு சாம்பியன் இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் 3-வதாகவும் வந்தனர். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வாய்ப்பில் லீவிஸ் ஹாமில்டன் 284 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறார். அடுத்த சுற்று போட்டி வருகிற 22-ந்தேதி சிங்கப்பூரில் நடக்கிறது.

உலக கோப்பை குத்துச்சண்டை இன்று தொடக்கம்

ஆண்களுக்கான 20-வது உலக கோப்பை குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் எகடெரின்பர்க்கில் இன்று தொடங்கி 21-ந்தேதி வரை நடக்கிறது. 87 நாடுகளைச் சேர்ந்த ஏறக்குறைய 450 வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கிறார்கள். உலக குத்துச்சண்டை வரலாற்றில் இந்தியர்கள் யாரும் இதுவரை தங்கப்பதக்கம் வென்றதில்லை. 4 வெண்கலம் மட்டுமே வென்று இருக்கிறார்கள். இந்த முறை இந்திய வீரர்கள் சாதனை படைக்கும் உத்வேகத்துடன் தயாராகி வருகிறார்கள். ஆசிய சாம்பியனான அமித் பன்ஹால் (52 கிலோ பிரிவு), கவிந்தர் சிங் பிஷ்த் (57 கிலோ), ஆஷிஷ்குமார் (75 கிலோ), சஞ்ஜீத் (91 கிலோ) ஆகியோருக்கு நேரடியாக 2-வது சுற்றில் களம் காணும் வகையில் ‘பை’ சலுகை வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச குத்துச்சண்டை சம்மேளன நிர்வாகத்தில் நீண்ட காலமாக நிலவும் நிர்வாக குளறுபடி காரணமாக இந்த போட்டிக்கான ஒலிம்பிக் தகுதி சுற்று அந்தஸ்தை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பறித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்க கும்பிளே வலியுறுத்தல்


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே அளித்த ஒரு பேட்டியில், ‘சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் காயத்தாலும், தனது முழு திறமையை வெளிப்படுத்தாததாலும் சற்று பின்னடைவுகளை சந்தித்தார். ஆனாலும் இன்னும் இந்திய அணியின் ‘நம்பர் ஒன்’ சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தான். இந்திய அணியில் அவர் கட்டாயம் இடம் பெற வேண்டும். ஆடும் லெவன் அணியில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். டோனியின் ஓய்வு குறித்து தேர்வாளர்கள் அவரிடம் பேச வேண்டும். முறைப்படி பிரிவுபசார போட்டி பெறுவதற்கு டோனி தகுதியானவர்’ என்றார். அண்மையில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டு டெஸ்டிலும் அஸ்வின் வெளியே உட்கார வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘வெளிநாட்டு பயிற்சியாளரின் யோசனையால் முன்னேற்றம்’- சிந்து

உலக பேட்மிண்டன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு மும்பையில் நேற்று தனியார் நிறுவனம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. விழாவில் கலந்து கொண்ட சிந்து கூறுகையில், ‘வெளிநாட்டு பயிற்சியாளர் கிம் ஜி ஹியன் (தென்கொரியா) வந்த பிறகு அவரது யோசனைப்படி எனது ஆட்ட அணுகுமுறையில் சில மாற்றங்களை செய்தேன். அது மிகவும் உதவிகரமாக இருந்தது. இதே போல் கோபிசந்தின் (தேசிய பயிற்சியாளர்) வழிகாட்டுதலும் பயனுள்ளதாக இருக்கிறது. இதன் மூலம் எனது ஆட்டத்திறனில் நிறைய முன்னேற்றம் கண்டுள்ளேன். இன்னும் முன்னேற்றம் காண வேண்டி உள்ளது’ என்றார்.


Next Story