கூடைப்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி உலக சாம்பியன்


கூடைப்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி உலக சாம்பியன்
x
தினத்தந்தி 15 Sep 2019 11:12 PM GMT (Updated: 15 Sep 2019 11:12 PM GMT)

உலக கோப்பை கூடைப்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி 2-வது முறையாக சாம்பியன் கோப்பையை வென்றது.

பீஜிங்,

18-வது உலக கோப்பை கூடைப்பந்து திருவிழா சீனாவில் கடந்த 16 நாட்களாக நடந்து வந்தது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் 5 முறை சாம்பியனான அமெரிக்கா கால் இறுதியோடு வெளியேறியதுடன் 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. 69 ஆண்டுகால உலக கோப்பை கூடைப்பந்து வரலாற்றில் அமெரிக்காவின் மோசமான செயல்பாடாக இது அமைந்தது.

மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் ஸ்பெயின்-அர்ஜென்டினா அணிகள் நேற்று மல்லுகட்டின. தொடக்கத்திலேயே 11-2 என்ற கணக்கில் புள்ளிகளை திரட்டிய ஸ்பெயின் தனது ஆதிக்கத்தை தளரவிடாமல் நிலைநாட்டியது. முதல் பாதியில் 43-31 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்ற ஸ்பெயின் கடைசி வரை அந்த முன்னிலையை தக்க வைத்துக் கொண்டது.

முடிவில் ஸ்பெயின் அணி 95-75 என்ற புள்ளி கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி 2-வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை உச்சிமுகர்ந்தது. இதற்கு முன்பு 2006-ம் ஆண்டில் அந்த அணி பட்டம் வென்று இருந்தது. ஸ்பெயின் அணியில் அதிகபட்சமாக ரிக்கி ருபியோ 20 புள்ளிகள் சேர்த்தார். முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 67-59 என்ற புள்ளி கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.

இந்த உலக கோப்பை போட்டியில் டாப்-2 இடங்களை பிடித்த ஸ்பெயின், அர்ஜென்டினா உள்பட 8 அணிகள் அடுத்த ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றன.

அடுத்த உலக கோப்பை கூடைப்பந்து போட்டியை 2023-ம் ஆண்டு பிலிப்பைன்ஸ், ஜப்பான், இந்தோனேஷியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.


Next Story