புரோ கபடி லீக்: டெல்லி அணி 13-வது வெற்றி


புரோ கபடி லீக்: டெல்லி அணி 13-வது வெற்றி
x
தினத்தந்தி 16 Sep 2019 11:38 PM GMT (Updated: 16 Sep 2019 11:38 PM GMT)

புரோ கபடி லீக் தொடரில் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி தனது 13-வது வெற்றியை பதிவு செய்தது.

புனே,

12 அணிகள் இடையிலான புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் புனேவில் நேற்று இரவு நடந்த 93-வது லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-உ.பி.யோத்தா அணிகள் சந்தித்தன. இதில் தொடக்கம் முதலே முன்னிலை வகித்த உ.பி.யோத்தா அணி ஆட்ட நேரம் முடிவில் 38-32 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது. 15-வது ஆட்டத்தில் ஆடிய உ.பி.யோத்தா அணி பெற்ற 8-வது வெற்றி இது. 16-வது ஆட்டத்தில் ஆடிய ஜெய்ப்பூர் அணி சந்தித்த 8-வது தோல்வி இதுவாகும். இதனை அடுத்து நடந்த லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 37-29 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை சாய்த்தது. 16-வது ஆட்டத்தில் ஆடிய தபாங் டெல்லி அணி 13-வது வெற்றியுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. 15-வது ஆட்டத்தில் ஆடிய தெலுங்கு டைட்டன்ஸ் அணி சந்தித்த 9-வது தோல்வி இதுவாகும்.

இன்று ஓய்வு நாளாகும். நாளை (புதன்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் மும்பை-உ.பி.யோத்தா (இரவு 7.30 மணி), புனேரி பால்டன்-தமிழ் தலைவாஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story