உலக குத்துச்சண்டையில் இந்திய வீரர் அமித் பன்ஹால் கால்இறுதிக்கு தகுதி


உலக குத்துச்சண்டையில் இந்திய வீரர் அமித் பன்ஹால் கால்இறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 17 Sep 2019 11:35 PM GMT (Updated: 17 Sep 2019 11:35 PM GMT)

உலக குத்துச்சண்டையில் இந்திய வீரர் அமித் பன்ஹால் கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

எகடெரின்பர்க்,

20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் உள்ள எகடெரின்பர்க்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 52 கிலோ உடல் எடைப்பிரிவின் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் அமித் பன்ஹால், துருக்கி வீரர் பாதுஹன் சிட்சியை சந்தித்தார். தொடக்கம் முதலே தாக்குதல் பாணியை தொடுத்த அமித் பன்ஹால் 5-0 என்ற கணக்கில் பாதுஹன் சிட்சியை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். ஆசிய விளையாட்டு சாம்பியனான அமித் பன்ஹால், கால்இறுதியில் பிலிப்பைன்ஸ் வீரர் கார்லோ பாலமை எதிர்கொள்கிறார்.

இந்த வெற்றியை 69-வது பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அர்ப்பணிப்பதாக அமித் பன்ஹால் தெரிவித்தார்.

63 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் மனிஷ் கவுசிக் 5-0 என்ற கணக்கில் மங்கோலியாவின் சின்சோரிக் பாதர்சுக்கை சாய்த்து கால்இறுதிக்குள் நுழைந்தார். 91 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சஞ்சீத் 3-2 என்ற கணக்கில் உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற உஸ்பெகிஸ்தான் வீரர் சன்ஜர் துர்சுனோவுக்கு அதிர்ச்சி அளித்து கால்இறுதியை எட்டினார். இதே போல் 57 கிலோ எடைப்பிரிவில் கவிந்தர் சிங் பிஷ்ட் (இந்தியா) 3-2 என்ற கணக்கில் பின்லாந்து வீரர் அர்ஸ்லன் காடேவை வெளியேற்றி கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

Next Story