சென்னையில், பீச் வாலிபால் போட்டி - நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு


சென்னையில், பீச் வாலிபால் போட்டி - நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 30 Sep 2019 12:00 AM GMT (Updated: 30 Sep 2019 12:00 AM GMT)

சென்னையில் பீச் வாலிபால் போட்டியை நடத்துவது என்று மாநில கைப்பந்து சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சென்னை,

தமிழ்நாடு மாநில கைப்பந்து சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. விருதுநகர் மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.கே.துரைசிங் வரவேற்றார். மாநில கைப்பந்து சங்கத்தின் புதிய தலைவர் டாக்டர் பொன்.கவுதம் சிகாமணி எம்.பி. தலைமை தாங்கினார். சேர்மன் ஏ.கே.சித்திரை பாண்டியன், பொதுச் செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர், பொருளாளர் எம்.பி.செல்வகணேஷ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் சங்கத்தின் தலைமை புரவலராக எஸ்.என்.ஜெயமுருகன், ஆயுட்கால தலைவராக ஆர்.அர்ஜூன் துரை, புரவலர்களாக எல்.ஜெயசந்திரன், மகேஷ் பொய்யாமொழி, ஐ.பி.எஸ். அதிகாரி ரவி, எல்.எம்.ராமகிருஷ்ணன், ராமகிருஷ்ணன், வேல்முருகன், பாபு மனோகரன், தியாகபாரி, சீனியர் செயல் துணைத்தலைவராக ஆர்.ஆதித்தன், ஆர்.கே.துரைசிங் (ஆபரேட்டிங்), துணை சேர்மனாக அழகேசன் மற்றும் பல்வேறு கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

2019-20-ம் ஆண்டுக்கான நிர்வாக மற்றும் போட்டிகள் நடத்துவதற்கான செலவுக்கு பட்ஜெட்டில் மொத்தம் ரூ.56 லட்சத்து 80 ஆயிரத்தை ஒதுக்குவதற்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும் வருங்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன்படி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சென்னையில் பீச் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியை மெரினா பீச் கிளப் இணைந்து நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதே போல் மாநில அளவிலான பள்ளி கைப்பந்து சாம்பியன்ஷிப் (கரூர்), கல்லூரி அணிகளுக்கான போட்டி (சிவகங்கை), மினி சாம்பியன்ஷிப் (ராமநாதபுரம்), சப்-ஜூனியர் போட்டி (சேலம்), ஜூனியர் போட்டி (திருவாரூர்), இளையோர் போட்டித்தொடர் (நாமக்கல்), சீனியர் சாம்பியன்ஷிப் (தர்மபுரி), 21 வயதுக்குட்பட்டோருக்கான பீச் வாலிபால் சாம்பியன்ஷிப் (நாகப்பட்டினம்) ஆகிய போட்டிகளை நடத்துவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஊரகப்பகுதியில் விளையாட்டை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு கிராமப்புற விளையாட்டு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ.150 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்தில் கைப்பந்தும் அடங்கும். எனவே ஒவ்வொரு மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர்களும் உரிய அரசு அதிகாரிகளை அணுகி ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு கைப்பந்து மைதானத்தை பெற முயற்சிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.


Next Story