புரோ கபடி லீக்: மும்பை அணி 10-வது வெற்றி


புரோ கபடி லீக்: மும்பை அணி 10-வது வெற்றி
x
தினத்தந்தி 30 Sep 2019 11:53 PM GMT (Updated: 30 Sep 2019 11:53 PM GMT)

புரோ கபடி லீக் தொடரில் மும்பை அணி 10-வது வெற்றியை பதிவு செய்தது.

பஞ்ச்குலா,

7-வது புரோ கபடி லீக் தொடரில் பஞ்ச்குலாவில் நேற்று இரவு நடந்த 115-வது லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-தபாங் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 5-5 என்ற புள்ளி கணக்கில் இரு அணிகளும் சமநிலை வகித்தன. அதன் பிறகு முன்னிலை பெற தொடங்கிய பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் பாதியில் 25-14 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தது. பின் பாதியிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய பெங்கால் வாரியர்ஸ் அணி முடிவில் 42-33 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியை சாய்த்தது. பெங்கால் வாரியர்ஸ் அணியில் மனிந்தர் சிங் 13 புள்ளிகள் குவித்தார். அத்துடன் அவர் இந்த சீசனில் 200 புள்ளிகளை கடந்தார். 20-வது ஆட்டத்தில் ஆடிய பெங்கால் வாரியர்ஸ் அணி 13-வது வெற்றியை பதிவு செய்தது. தபாங் டெல்லி 20 ஆட்டத்தில் விளையாடி 15 வெற்றி, 3 தோல்வி, 2 டையுடன் முதலிடத்தில் தொடருகிறது.

மற்றொரு ஆட்டத்தில் தொடக்கம் முதலே முன்னிலை வகித்த மும்பை அணி 36-32 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை தோற்கடித்தது.

தமிழ் தலைவாஸ் அணி பிற்பாதியில் நெருக்கடி கொடுத்தாலும் வெற்றியை எட்ட முடியவில்லை. 19-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி 10-வது வெற்றியை பெற்றது. 20-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணி 14-வது தோல்வியை சந்தித்தது.


Next Story