உலக தடகளம்: மாரத்தானில் எத்தியோப்பியா வீரர் முதலிடம்


உலக தடகளம்: மாரத்தானில் எத்தியோப்பியா வீரர் முதலிடம்
x
தினத்தந்தி 6 Oct 2019 10:30 PM GMT (Updated: 6 Oct 2019 7:58 PM GMT)

உலக தடகளத்தின் மாரத்தானில் எத்தியோப்பியா வீரர் லெலிசா டேசிசா முதலிடம் பிடித்தார்.

தோகா, 

உலக தடகளத்தின் மாரத்தானில் எத்தியோப்பியா வீரர் லெலிசா டேசிசா முதலிடம் பிடித்தார்.

கென்யா வீராங்கனை

17-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நேற்றுடன் முடிவடைந்தது. 10 நாட்களாக நடந்த இந்த போட்டியில் பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் நடப்பு சாம்பியனான கென்யா வீராங்கனை ஹெலென் ஓபிரி புதிய போட்டி சாதனையுடன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார். அவர் இலக்கை 14 நிமிடம் 26.72 வினாடிகளில் கடந்தார்.

1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நெதர்லாந்து வீராங்கனை சிபன் ஹசன் 3 நிமிடம் 51.95 வினாடிகளில் முதலாவது வந்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். இந்த தொடரில் அவர் வென்ற 2-வது தங்கம் இதுவாகும். ஏற்கனவே 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலும் 26 வயதான சிபன் ஹசன் மகுடம் சூடியிருந்தார்.

மாரத்தானில் யார்?

நள்ளிரவில் நடந்த ஆண்களுக்கான மாரத்தான் போட்டியில் (42.19 கிலோ மீட்டர் தூரம்) டாப்-2 இடங்களை எத்தியோப்பியா வீரர்கள் பிடித்தனர். அதில் லெலிசா டேசிசா 2 மணி 10 நிமிடம் 40 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் தனதாக்கினார். உலக மாரத்தானில் எத்தியோப்பியா வீரர் ஒருவர் பட்டம் வெல்வது 2001-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். இதில் பங்கேற்ற 73 வீரர்களில் 55 வீரர்கள் மட்டுமே பந்தய தூரத்தை நிறைவு செய்தனர்.

ஆண்களுக்கான 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கிறிஸ்டியன் கோல்மன், ஜஸ்டின் கேத்லின், மைக்கேல் ரோஜர்ஸ், நோவா லைலெஸ் ஆகியோர் அடங்கிய அமெரிக்க குழுவினர் 37.10 வினாடிகளில் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தனர். இந்த பிரிவில் 2007-ம் ஆண்டுக்கு பிறகு இப்போது தான் அமெரிக்க அணி பட்டம் வென்று இருக்கிறது. இதன் பெண்கள் பிரிவில் ஷெல்லி அன் பிராசெர் பிரைஸ், நதாலி ஒயிட்டி, ஜோனிலே சுமித், ஷெரிக்கா ஜாக்சன் ஆகியோர் கொண்ட ஜமைக்கா அணியினர் (41.44 வினாடி) தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினர்.

Next Story