இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி: சென்னையின் எப்.சி. அணி வெற்றி


இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி: சென்னையின் எப்.சி. அணி வெற்றி
x
தினத்தந்தி 14 Oct 2019 11:08 PM GMT (Updated: 14 Oct 2019 11:08 PM GMT)

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில், சென்னையின் எப்.சி. அணி 4-0 என்ற கோல் கணக்கில் ரியல் காஷ்மீர் அணியை தோற்கடித்தது.


* இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிக்கான சென்னையின் எப்.சி. அணி தனது கடைசி நட்புறவு ஆட்டத்தில் ஐ லீக் அணியான ரியல் காஷ்மீர் அணியை சென்னையில் நேற்று சந்தித்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சென்னையின் எப்.சி. அணி 4-0 என்ற கோல் கணக்கில் ரியல் காஷ்மீர் அணியை தோற்கடித்தது. சென்னை அணியில் டிராகோஸ் பிர்டுலெஸ்கு 2 கோலும், ஆந்த்ரே ஸ்சிம்ப்ரி, ரபெல் கிரிவெல்லாரோ தலா ஒரு கோலும் அடித்தனர்.

* ஜிம்பாப்வே மற்றும் நேபாளம் கிரிக்கெட் சங்க நிர்வாகத்தில் அந்த நாட்டு அரசின் தலையீடு இருந்ததை தொடர்ந்து அந்த இரண்டு கிரிக்கெட் வாரியத்தையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இடைநீக்கம் செய்து இருந்தது. இந்த இரண்டு நாட்டு வாரியங்களும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிமுறையின் படி செயல்படுவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து இரு நாட்டு வாரியத்தையும் மீண்டும் உறுப்பினராக சேர்க்க ஐ.சி.சி. முடிவு செய்துள்ளது.

* ஐ.பி.எல். போட்டிக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக கடந்த இரண்டு சீசனிலும் இருந்த ஆர்.அஸ்வினை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பரிமாற்றம் செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்து இருந்தது. தற்போது அந்த முடிவை கைவிட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ‘ஆர்.அஸ்வினை மற்ற அணிக்கு பரிமாற்றம் செய்யும் திட்டம் இல்லை என்றும் அவர் தங்கள் அணியில் தொடருவார்’ என்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியா தெரிவித்துள்ளார்.

* இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட முன்னாள் கேப்டன் கங்குலிக்கு, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னாள் வீரர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கங்குலிக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்.

* இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 45.5 ஓவர்களில் 146 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 48 ஓவர்களில் 140 ரன்னில் சுருண்டது. இதனால் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இந்திய அணி வீராங்கனை எக்தா பிஸ்த் ஆட்டநாயகி விருதையும், தென்ஆப்பிரிக்க வீராங்கனை மரிஜானே காப் தொடர்நாயகி விருதையும் பெற்றனர்.


Next Story