புரோ கபடி: பெங்களூரு, மும்பை அணிகள் அரைஇறுதிக்கு தகுதி


புரோ கபடி: பெங்களூரு, மும்பை அணிகள் அரைஇறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 14 Oct 2019 11:23 PM GMT (Updated: 14 Oct 2019 11:23 PM GMT)

புரோ கபடி போட்டியில் பெங்களூரு, மும்பை அணிகள் அரைஇறுதிக்கு தகுதிபெற்றன.

ஆமதாபாத்,

7-வது புரோ கபடி லீக் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடித்த தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் ஆகிய அணிகள் நேரடியாக அரைஇறுதிக்கு முன்னேறின. இந்த நிலையில் ஆமதாபாத்தில் நேற்று இரவு நடந்த அரைஇறுதிக்கான முதலாவது ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்ஸ் அணி, உ.பி.யோத்தாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பெரும்பாலான நேரங்களில் முன்னிலை வகித்த உ.பி.யோத்தா அணி கடைசி கட்டத்தில் பின்னடவை சந்தித்தது. அந்த சறுக்கலில் இருந்து அந்த அணியால் மீள முடியவில்லை. முடிவில் பெங்களூரு புல்ஸ் அணி 48-45 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. தோல்வி கண்ட உ.பி.யோத்தா அணி போட்டியில் இருந்து வெளியேறியது. பெங்களூரு அணி வீரர் பவான் ஷெராவத் 20 புள்ளிகள் குவித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

அரைஇறுதிக்கான மற்றொரு ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டத்தில் மும்பை-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் சந்தித்தன. இதில் 11 புள்ளிகள் வரை இரு அணிகளும் சமநிலை வகித்தன. அதன் பிறகு மும்பை அணியின் கை ஓங்கியது. முடிவில் மும்பை அணி 46-38 என்ற புள்ளி கணக்கில் அரியானாவை சாய்த்து அரைஇறுதிக்குள் நுழைந்தது. தோல்வி அடைந்த அரியானா அணி நடையை கட்டியது.

நாளை (புதன்கிழமை) நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் தபாங் டெல்லி-பெங்களூரு புல்ஸ் (இரவு 7.30 மணி) அணியும், 2-வது அரைஇறுதியில் பெங்கால் வாரியர்ஸ்-மும்பை அணிகள் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story