உலக டூர் பேட்மிண்டன் இறுதிசுற்று: இந்திய வீராங்கனை சிந்து சாதிப்பாரா?


உலக டூர் பேட்மிண்டன் இறுதிசுற்று: இந்திய வீராங்கனை சிந்து சாதிப்பாரா?
x
தினத்தந்தி 10 Dec 2019 11:26 PM GMT (Updated: 10 Dec 2019 11:26 PM GMT)

உலக டூர் பேட்மிண்டன் இறுதிசுற்று போட்டியில், இந்திய வீராங்கனை சிந்து சாதிப்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

குவாங்ஜோவ்,

டார்-8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் குவாங்ஜோவ் நகரில் இன்று தொடங்கி 15-ந்தேதி வரை நடக்கிறது. இந்திய தரப்பில் இந்த போட்டியில் விளையாட தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள நடப்பு சாம்பியன் பி.வி.சிந்து மட்டுமே தகுதி பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சரித்திரம் படைத்த பி.வி. சிந்து, அதன் பிறகு விளையாடிய 6 தொடர்களில் பெரும் சறுக்கலை சந்தித்தார். கால்இறுதிக்கு மேல் எந்த போட்டியிலும் முன்னேறவில்லை. இந்த நிலையில் அவர் மறுபடியும் வெற்றிப்பாதைக்கு திரும்புவதோடு, இந்த சீசனை உயர்ந்த நிலையில் முடிப்பதற்கு இது அருமையான வாய்ப்பாகும். போட்டியில் களம் காணும் 8 வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதில் பி.வி.சிந்து ‘பி’ பிரிவில் அகானே யமாகுச்சி (ஜப்பான்), சென் யூ பே (சீனா), ஹி பிங் ஜியாவ் (சீனா) ஆகியோருடன் அங்கம் வகிக்கிறார். ஒவ்வொரு வீராங்கனைகளும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரைஇறுதியை எட்டுவார்கள். சிந்து தனது தொடக்க ஆட்டத்தில் அகானே யமாகுச்சியுடன் மோதுகிறார். யமாகுச்சியுடன் இதுவரை 16 ஆட்டங்களில் மோதியிருக்கும் சிந்து அதில் 10-ல் வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.10½ கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் வாகை சூடுவோருக்கு ரூ.85 லட்சம் பரிசுத்தொகை கிடைக்கும்.

Next Story