மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சிந்து, சாய்னா வெளியேற்றம்


மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சிந்து, சாய்னா வெளியேற்றம்
x
தினத்தந்தி 11 Jan 2020 12:17 AM GMT (Updated: 11 Jan 2020 12:17 AM GMT)

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் கால்இறுதியில் தோல்வி கண்டு வெளியேறினார்கள்.

கோலாலம்பூர்,

மொத்தம் ரூ.2 கோடியே 86 லட்சம் பரிசுத் தொகைக்கான மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான தாய் ஜூ யிங்கை (சீன தைபே) சந்தித்தார்.

36 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 16-21, 16-21 என்ற நேர்செட்டில் தாய் ஜூ யிங்கிடம் தோல்வி கண்டு வெளியேறினார். சிந்து தொடர்ச்சியாக 2-வது முறையாக தாய் ஜூ யிங்கிடம் வீழ்ந்தார். 17-வது முறையாக தாய் ஜூ யிங்குடன் மோதிய சிந்து சந்தித்த 12-வது தோல்வி இதுவாகும். கடந்த ஆண்டில் உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த சிந்து அதன் பிறகு 8 தொடர்களில் ஆடி ஒன்றில் கூட பட்டம் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரினை (ஸ்பெயின்) எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதல் கடைசி வரை ஆதிக்கம் செலுத்திய கரோலினா மரின் 21-8, 21-7 என்ற நேர்செட்டில் எளிதில் சாய்னாவை விரட்டியடித்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த ஆட்டம் 30 நிமிடம் அரங்கேறியது. கரோலினா மரினுடன் 13-வது முறையாக மல்லுக்கட்டிய சாய்னா சந்தித்த 7-வது தோல்வி இதுவாகும்.

கடந்த ஆண்டு இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் போட்டியில் சாய்னாவிடம் கண்டு இருந்த தோல்விக்கு கரோலினா மரின் நேற்று பதிலடி கொடுத்தார். இருவரும் தோல்வி அடைந்ததன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.


Next Story