ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: டென்மார்க் வீரர் ஆக்சல்சென் ‘சாம்பியன்’


ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: டென்மார்க் வீரர் ஆக்சல்சென் ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 16 March 2020 12:21 AM GMT (Updated: 16 March 2020 12:21 AM GMT)

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியில் டென்மார்க் வீரர் ஆக்சல்சென் பட்டத்தை தட்டிச் சென்றார்.

பர்மிங்காம்,

நூற்றாண்டு கால பழமையான ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் கடந்த 11-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இதில் இந்திய நட்சத்திரங்கள் சாய்னா நேவால் முதல் சுற்றுடனும், உலக சாம்பியன் பி.வி.சிந்து கால்இறுதியுடனும் வெளியேறினர். ஒலிம்பிக் சாம்பியன்களான ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின், சீன வீரர் சென் லாங் ஆகியோர் அரைஇறுதி சுற்றை தாண்டவில்லை.

இந்த நிலையில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் 7-ம் நிலை வீரர் விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்), 2-ம் நிலை வீரர் சோவ் டைன் சென்னை (சீனதைபே) எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே மிரட்டலாக ஆடிய விக்டர் ஆக்சல்சென் 21-13, 21-14 என்ற நேர் செட் கணக்கில் டைன் சென்னை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் கோப்பையை வசப்படுத்தினார். இந்த ஆட்டம் 46 நிமிடங்கள் நடந்தது. டென்மார்க் வீரர் ஒருவர் கவுரவமிக்க இந்த பட்டத்தை வெல்வது 1999-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். 26 வயதான ஆக்சல்செனுக்கு ரூ.57 லட்சம் பரிசுத்தொகையும், 12 ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைத்தன.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும் ‘நம்பர் ஒன்’ மங்கையுமான சென் யூ பேவும் (சீனா), 2-ம் நிலை வீராங்கனை தாய் ஜூ யிங்கும் (சீனதைபே) கோதாவில் இறங்கினர். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தாய் ஜூ யிங் 21-19, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி கண்டு 3-வது முறையாக மகுடம் சூடினார். ஏற்கனவே 2017, 2018-ம் ஆண்டுகளிலும் இந்த பட்டத்தை அவர் கைப்பற்றி இருக்கிறார். இதன் பெண்கள் இரட்டையர் பிரிவில் ஜப்பானின் யுகி புகுஷிமா-சயகா ஹிரோட்டா ஜோடி கோப்பையை வென்றது.

கொரோனா பீதிக்கு மத்தியில் ஆரம்பித்த இந்த போட்டி ஒரு வழியாக நிறைவடைந்ததால் போட்டி அமைப்பாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இனி ஏப்ரல் 12-ந்தேதி வரை எல்லா சர்வதேச போட்டிகளையும் பேட்மிண்டன் சம்மேளனம் தள்ளி வைத்து இருக்கிறது.


Next Story