அடுத்த ஆண்டு நடத்தப்படும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தள்ளிவைப்பு - சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில், ஜப்பான் அரசு கூட்டாக அறிவிப்பு


அடுத்த ஆண்டு நடத்தப்படும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தள்ளிவைப்பு - சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில், ஜப்பான் அரசு கூட்டாக அறிவிப்பு
x
தினத்தந்தி 25 March 2020 12:32 AM GMT (Updated: 25 March 2020 12:32 AM GMT)

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் மற்றும் போட்டியை நடத்தும் ஜப்பான் அரசு கூட்டாக அறிவித்துள்ளன.

டோக்கியோ, 

32-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. உலகையே ஆட்டி படைக்கும் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பரவலால் ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதில் பலத்த சந்தேகம் நிலவியது. கொரோனா அச்சுறுத்தலால் ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைக்க வேண்டும் என்று பெரும்பாலான நாடுகள் வலியுறுத்தின.

இதன் உச்சமாக ஆஸ்திரேலியா, கனடா ஒலிம்பிக் கமிட்டிகள் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து அதிரடியாக விலகின. சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஓ.சி.), ஒலிம்பிக் போட்டியை நடத்துவது குறித்து தீர்க்கமான ஒரு முடிவுக்கு வர இன்னும் 4 வாரங்கள் காத்திருக்க முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே நேற்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பாச்சை டெலிபோனில் தொடர்பு கொண்டு தற்போதைய சூழ்நிலையில் ஒலிம்பிக் போட்டி சந்திக்க வேண்டிய சவால்கள் குறித்து விரிவாக விவாதித்தார். அப்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டியை ஓராண்டு தள்ளி வைப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு உடனடியாக சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பாச்சும் முழுமனதாக ஒப்புக்கொண்டார். இதனை பின்னர் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே நிருபர்களிடம் தெரிவித்தார். இதனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலும், ஜப்பான் அரசும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா தாக்கம் குறித்த உலக சுகாதார அமைப்பின் தகவலின் படியும், வீரர்கள், ஒலிம்பிக் போட்டியில் தொடர்புடைய அனைத்து தரப்பினர் மற்றும் சர்வதேச சமூகத்தினரின் நலனை பாதுகாக்கும் பொருட்டும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டி இந்த ஆண்டுக்கு (2020) பிறகும், அடுத்த ஆண்டு (2021) கோடை காலத்திற்கு முன்பாகவும் நடைபெறும். அதுவரை ஒலிம்பிக் தீபம் ஜப்பானில் இருக்கும் என்றும் இந்த போட்டி ‘ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டி 2020’ என்ற பெயரிலேயே அழைக்கப்படும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

124 ஆண்டுகால நவீன ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை எந்த ஒலிம்பிக் போட்டியும் தள்ளிப்போனதில்லை. உலக போர் காரணமாக 1916, 1940, 1944 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் அமைதியான தருணத்தில் ஒலிம்பிக் போட்டி தள்ளி வைக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறையாகும். இந்த மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவுக்காக ஜப்பான் அரசாங்கம் ஏறக்குறைய ரூ.1 லட்சம் கோடி செலவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் வடக்கு ஜப்பானில் உள்ள புகுஷிமாவில் நாளை தொடங்க இருந்தது. ஒலிம்பிக் போட்டி தள்ளிவைக்கப்பட்டு இருப்பதை தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் தொடர் ஓட்டம் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டியை தள்ளிவைத்து இருப்பதை பல்வேறு நாடுகளின் ஒலிம்பிக் கமிட்டிகள், தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு சம்மேளனங்கள் வரவேற்றுள்ளன. இது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா கருத்து தெரிவிக்கையில், ‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை தள்ளிவைத்து இருக்கும் முடிவை இந்திய ஒலிம்பிக் சங்கம் வரவேற்கிறது. இதன் மூலம் வீரர், வீராங்கனைகள் அழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள். கொரோனா தாக்கத்தால் ஏற்பட்டுள்ள முடக்கம் முடிந்ததும் வீரர்கள், தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் மற்றும் ஸ்பான்சர்களுடன் கலந்து ஆலோசித்து போட்டிக்கான அடுத்த கட்ட திட்டம் குறித்து முடிவு செய்யப்படும்’ என்றார்.

Next Story