‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 10 பதக்கங்கள் வெல்லும்’ - நரிந்தர் பத்ரா நம்பிக்கை


‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 10 பதக்கங்கள் வெல்லும்’ - நரிந்தர் பத்ரா நம்பிக்கை
x
தினத்தந்தி 2 May 2020 11:30 PM GMT (Updated: 2 May 2020 7:23 PM GMT)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 10-க்கும் அதிகமான பதக்கங்கள் வெல்லும் என்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா நம்பிக்கை தெரிவித்தார்.

புதுடெல்லி, 

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா வைரசின் கடும் பாதிப்பு காரணமாக பல்வேறு சர்வதேச விளையாட்டு போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் இருக்கின்றன. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு, அடுத்த ஆண்டு (2021) ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு இன்னும் மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாததால், பல்வேறு நாடுகளில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை எப்போது மாறும்? என்பது கணிக்க முடியாததாக இருக்கிறது. இதனால் டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

2026-ம் ஆண்டுக்கான இளையோர் ஒலிம்பிக் போட்டி மற்றும் 2032-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான வாய்ப்பை பெற வேண்டும் என்பதில் நாங்கள் ஆர்வமாகவும், உறுதியாகவும் இருக்கிறோம். இதற்கு முறைப்படி விண்ணப்பிக்க ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொள்ள ஒரு குழுவினர் பல்வேறு ஸ்டேடியங்களுக்கு சென்று அங்குள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். இது ஒரு தொடர்ச்சியான பணியாகும். வருகிற டிசம்பர் மாதம் வரை இது தொடர்பான பணிகளில் ஈடுபட முடியாது என்று நினைக்கிறேன்.

ஒலிம்பிக் போட்டி நடத்துவது குறித்து அரசு மற்றும் வணிக நிறுவனங்களிடம் பேசுவதற்கு இது சரியான தருணம் இல்லை. தற்போது உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பிரச்சினையை எப்படி சமாளிக்கபோகிறோம் என்பது தான் முக்கியமானதாகும். ஒலிம்பிக் உள்பட எந்தவொரு பெரிய சர்வதேச போட்டியையும் நடத்தக்கூடிய தகுதி இந்தியாவுக்கு இருக்கிறது. 2010-ம் ஆண்டில் காமன்வெல்த் போட்டி டெல்லியில் நடத்தப்பட்டாலும், நினைத்த மாதிரி அந்த போட்டியின் மூலம் ஈர்க்கப்பட்டு அதிக அளவில் வீரர்கள் உருவாகவில்லை. அதுபோன்ற பெரிய போட்டியை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு ஏற்கனவே 80 இந்திய வீரர்-வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். அவர்களது செயல்பாடுகளை இயக்குனர்களும், தலைமை பயிற்சியாளர்களும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இரட்டை இலக்கத்தில் (10 மற்றும் அதற்கு அதிகமான) பதக்கம் வெல்லும் என்ற எனது கணிப்பில் உறுதியாக இருக்கிறேன். கொரோனா பிரச்சினை காரணமாக போட்டி தள்ளி வைக்கப்பட்டு இருப்பதால் இதில் மாற்றம் எதுவும் இருக்கும் என்று நினைக்கவில்லை. இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் ஆக்கி அணி பதக்கம் வெல்லும் வென்று எதிர்பார்க்கிறேன் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில் இந்திய தடகள சம்மேளன சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் ஆன்-லைன் மூலம் நேற்று நடந்தது. இதில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா காணொலி காட்சி மூலம் பேசுகையில், ‘சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் நிர்வாகிகளுடன் நான் தொடர்பில் இருந்து வருகிறேன். சர்வதேச போட்டிகள் குறித்து அவர்களுடன் நான் விவாதிப்பது உண்டு. தள்ளிவைக்கப்பட்டு இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு நிச்சயம் நடைபெறும் என்று நம்புகிறேன். அத்துடன் வருகிற அக்டோபர் மாதத்திற்குள் கொரோனா தடுப்புக்கான மருந்து கணடுபிடிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்றார்.


Next Story