பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய தடகள வீராங்கனை தீபா மாலிக் ஓய்வு


பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய தடகள வீராங்கனை தீபா மாலிக் ஓய்வு
x
தினத்தந்தி 11 May 2020 10:45 PM GMT (Updated: 11 May 2020 7:06 PM GMT)

பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய தடகள வீராங்கனை தீபா மாலிக் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

2016-ம் ஆண்டு ரியோடிஜெனீரோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் குண்டு எறிதலில் இந்திய தடகள வீராங்கனை தீபா மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். முதுகு தண்டுவட பிரச்சினைக்கு ஆபரேஷன் செய்து இடுப்பு பகுதிக்கு கீழே செயல் இழந்ததால் சக்கர நாற்காலியின் உதவியுடன் போட்டிகளில் பங்கேற்ற அவர் 2011-ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டி உள்பட பல சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அர்ஜூனா, கேல்ரத்னா, பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை பெற்று இருக்கும் அரியானாவை சேர்ந்த 49 வயதான தீபா மாலிக் பாரா விளையாட்டு போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி தலைவராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் தீபா மாலிக் அளித்த பேட்டியில், ‘நான் இன்று (நேற்று) ஓய்வு பெறுவதாக சொன்னது யார்?. இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு முன்பே, கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் மாதத்தில் நான் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன். ஆனால் அப்போது நான் வெளிப்படையாக எதுவும் அறிவிக்கவில்லை. ஓய்வு கடிதத்தை சமர்ப்பித்த பிறகு தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதால் கடந்த ஆண்டே ஓய்வு கடிதத்தை அளித்து விட்டு, இந்திய பாரா ஒலிம்பிக் தலைவர் தேர்தலில் நின்று வெற்றி பெற்று இருக்கிறேன். நிர்வாகியாக புதிய பயணத்தை தொடங்க உள்ளேன்’ என்று தெரிவித்தார்.

Next Story