மிக உயர்ந்த கேல் ரத்னா விருதுக்கு 22 வயதான தடகள வீரர் நீரஜ் சோப்ரா பரிந்துரை
இந்த ஆண்டிற்கான நாட்டின் மிக உயர்ந்த விளையாட்டு விருதுக்கு 22 வயதான தடகள வீரர் நீரஜ் சோப்ரா இந்திய தடகள சம்மேளனத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி
இந்திய தடகள சம்மேளனம் (ஏ.எஃப்.ஐ) அமைத்த குழு தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக நட்சத்திர ஈட்டி எரியும் வீரர் நீரஜ் சோப்ராவை கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைத்தது.
கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற பிறகு நீரஜ் சோப்ராவுக்கு 2018ஆம் ஆண்டு அர்ஜுனா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதே ஆண்டில், அவர் கேல் ரத்னா விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார். 2018ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற பிறகு நீரஜ் சோப்ரா கடந்த ஆண்டு மீண்டும் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.இந்த ஆண்டு கேல் ரத்னாவுக்கான விருதுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட ஒரே தடகள வீரர் நீரஜ் சோப்ரா மட்டுமே என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
22 வயதான நீரஜ் சோப்ரா இந்த ஆண்டிற்கான நாட்டின் மிக உயர்ந்த விளையாட்டு விருதுக்கு இந்திய தடகள் சம்மேளனத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஒரே தடகள விளையாட்டு வீரர் ஆவார்.
கேல் ரத்னா விருது ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் 7.5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசைக் கொண்டுள்ளது.
2019ஆம் ஆண்டில் நடந்த உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் தங்கமும், 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களும் (100மீ. மற்றும் 200மீ.) வென்ற முன்னணி ஓட்டப்பந்தய வீரர் டூட்டி சந்த், ஏற்கனவே ஒடிசா அரசாங்கத்தால் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
Related Tags :
Next Story