வினேஷ் போகத், நீரஜ் சோப்ராவுக்கு கேல்ரத்னா விருது வழங்க பரிந்துரை


வினேஷ் போகத், நீரஜ் சோப்ராவுக்கு கேல்ரத்னா விருது வழங்க பரிந்துரை
x
தினத்தந்தி 1 Jun 2020 2:21 AM GMT (Updated: 1 Jun 2020 2:21 AM GMT)

மல்யுத்த மங்கை வினேஷ் போகத், தடகள வீரர் நீரஜ் சோப்ரா ஆகியோருக்கு கேல்ரத்னா விருது வழங்கக்கோரி விளையாட்டு சம்மேளனங்கள் பரிந்துரை செய்துள்ளன.

புதுடெல்லி, 

விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளான ராஜீவ்காந்தி கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளுக்கு தகுதியான வீரர், வீராங்கனைகளின் பெயர்களை சம்பந்தப்பட்ட விளையாட்டு சம்மேளனங்கள் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கின்றன. இதற்கான கடைசி நாள் ஜூன் 3-ந்தேதி ஆகும்.

இந்த நிலையில் இந்திய முன்னணி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் பெயரை கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைப்பது என்று தேசிய மல்யுத்த சம்மேளனம் முடிவு செய்துள்ளது. ‘மல்யுத்தத்தில் கேல் ரத்னா விருது பரிந்துரைக்கு எங்களது ஒருமித்த தேர்வு வினேஷ் போகத் தான். அவரது பெயரை விளையாட்டு அமைச்சத்துக்கு இன்று அனுப்பி வைப்போம். அர்ஜூனா விருதுக்குரியவர்களின் பெயரை இன்னும் முடிவு செய்யவில்லை. அதற்கு நிறைய விண்ணப்பங்கள் எங்களுக்கு வந்துள்ளன. அதில் தகுதியான விண்ணப்பத்தை சம்மேளன தலைவர் விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்புவார்’ என்று தேசிய மல்யுத்த சம்மேளன செயலாளர் வினோத் தோமர் தெரிவித்தார்.

வினேஷ்- சாக்‌ஷி

வினேஷ் போகத் தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டு இருக்கிறார். அரியானாவைச் சேர்ந்த 25 வயதான வினேஷ் போகத் 53 கிலோ எடைப்பிரிவுக்கான தரவரிசையில் 3-வது இடம் வகிக்கிறார். கடந்த ஆண்டு உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்றதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். ஆண்டின் தொடக்கத்தில் ரோம் ரேங்கிங் சீரிஸ் தொடரில் தங்க மகுடம் சூடினார். அதன் பிறகு டெல்லியில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் கைப்பற்றினார். மல்யுத்தத்தில் தொடர்ந்து அசத்தி வரும் அவருக்கு இந்த தடவை கேல்ரத்னா விருது கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் ருசித்தவரான மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் ஏற்கனவே 2016-ம் ஆண்டு கேல்ரத்னா விருதை பெற்றிருக்கிறார். சமீப காலமாக அவர் வெகுவாக தடுமாறி வரும் நிலையில் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கும்படி விண்ணப்பம் அனுப்பி உள்ளார். ஆனால் அவரது பெயர் விருதுக்கு பரிந்துரைக்கப்படுவது சந்தேகம் தான்.

நீரஜ் சோப்ரா

ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் பெயரை தொடர்ந்து 3-வது ஆண்டாக கேல்ரத்னா விருதுக்கு இந்திய தடகள சம்மேளனம் பரிந்துரை செய்துள்ளது. காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு சாம்பியனான 22 வயதான நீரஜ் சோப்ரா முழங்கை காயம் காரணமாக 2019-ம் ஆண்டு எந்த போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. காயத்தில் இருந்து மீண்ட பிறகு கடந்த ஜனவரி மாதம் தென்ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் 87.86 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

ஏற்கனவே கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அஞ்சும் மோட்ஜில் ஆகியோரது பெயரும் கேல்ரத்னா விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு பாராட்டு பட்டயத்துடன் ரூ.7½ லட்சம் பரிசும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story