தடகள வீராங்கனை டுட்டீ சந்துக்கு வழங்கப்பட்ட நிதிஉதவி எவ்வளவு? - ஒடிசா அரசு விளக்கம்


தடகள வீராங்கனை டுட்டீ சந்துக்கு வழங்கப்பட்ட நிதிஉதவி எவ்வளவு? - ஒடிசா அரசு விளக்கம்
x
தினத்தந்தி 16 July 2020 9:45 PM GMT (Updated: 16 July 2020 9:07 PM GMT)

தடகள வீராங்கனை டுட்டீ சந்துக்கு வழங்கப்பட்ட நிதிஉதவி எவ்வளவு என்று ஒடிசா அரசு விளக்கம் அளித்துள்ளது.

புவனேஸ்வர், 

இந்தியாவின் முன்னணி ஓட்டப்பந்தய வீராங்கனையும், 100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனையாளருமான ஒடிசாவை சேர்ந்த 24 வயது டுட்டீ சந்த் சமீபத்தில் வெளியிட்ட தனது டுவிட்டர் பதிவில் ‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டி பயிற்சிக்கு நிதி திரட்டும் வகையில் தனது காரை விற்பனை செய்ய இருப்பதாகவும், அதனை வாங்க விரும்புபவர்கள் தனது மானேஜரை தொடர்பு கொள்ளலாம்’ என்றும் தெரிவித்து இருந்தார். பின்னர் அந்த பதிவை நீக்கி விட்டார். அத்துடன் அவர் அளித்த விளக்கத்தில், ‘சொகுசு காரை பராமரிக்க முடியவில்லை என்பதால் தான் விற்கப் போவதாக அறிவித்தேன். எனது பயிற்சிக்கு பணம் தேவைப்படுவதால் விற்பதாக ஒருபோதும் கூறவில்லை. எனது கருத்து திரிக்கப்பட்டு இருக்கிறது. ஒடிசா அரசும், கே.ஐ.ஐ.டி. பல்கலைக்கழகமும் எனக்கு எப்பொழுதும் ஆதரவு அளித்து வருகின்றன. ஆனாலும் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக மிக அதிகமாக செலவாகும் என்பதை மறுக்க முடியாது. தற்போது காரை விற்று கிடைக்கும் பணத்தை பயிற்சிக்கு பயன்படுத்தி விட்டு கொரோனா பிரச்சினை முடிந்த பிறகு அரசு தரும் பணத்தை வைத்து புதிய கார் வாங்கலாம் என்று நினைத்தேன். எனக்கு நிதி பற்றாக்குறை இருப்பதாக நான் ஒருபோதும் சொல்லவில்லை’ என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் டுட்டீ சந்துக்கு 4 கோடியே 9 லட்சம் ரூபாய் நிதி உதவியாக வழங்கப்பட்டு இருப்பதாக ஒடிசா மாநில விளையாட்டுத் துறை புள்ளி விவரத்துடன் தெரிவித்துள்ளது. அத்துடன் அவருக்கு ஒடிசா சுரங்க கார்ப்பரேஷனில் ‘குரூப் ஏ’ பிரிவு அதிகாரியாக வேலை வழங்கப்பட்டு இருப்பதாகவும், அதன் மூலம் மாதம் ரூ.84 ஆயிரம் ஊதியம் பெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அரசின் புள்ளி விவரம் சரியானது கிடையாது என்று டுட்டீ சந்த் மறுத்து இருக்கிறார். ஆசிய விளையாட்டு போட்டியில் இரண்டு வெள்ளிப்பதக்கம் வென்றதற்காக அரசு வழங்கிய ரூ.3 கோடி பரிசுத்தொகை, எனது வேலைக்கு வழங்கப்படும் சம்பளம் ஆகியவற்றை எப்படி நிதிஉதவியாக எடுத்து கொள்ள முடியும் என்று கேள்வி விடுத்துள்ளார்.

Next Story