பார்முலா1 கார்பந்தய வீரர் செர்ஜியோவுக்கு கொரோனா பாதிப்பு


பார்முலா1 கார்பந்தய வீரர் செர்ஜியோவுக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 31 July 2020 11:51 PM GMT (Updated: 31 July 2020 11:51 PM GMT)

பிரபல பார்முலா1 கார்பந்தய வீரர் மெக்சிகோவை சேர்ந்த செர்ஜியோ பெரேஸ் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்.

சில்வர்ஸ்டோன்,

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் கடந்த மார்ச் மாதம் தொடங்க இருந்தது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரசின் ருத்ரதாண்டவத்தால் சில சுற்றுகள் ரத்து செய்யப்பட்டன.

இதன் பின்னர் பல்வேறு கொரோனா தடுப்பு மருத்துவ கட்டுப்பாடு நடைமுறைகளுடன் கடந்த மாதம் ஆஸ்திரியா கிராண்ட்பிரியுடன் இந்த சீசனுக்கான பார்முலா1 கார்பந்தயம் தொடங்கியது. கொரோனா பீதியால் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதுவரை 3 சுற்று பந்தயம் நிறைவடைந்துள்ளது. அடுத்து, 4-வது சுற்று பந்தயமான பிரிட்டிஷ் கிராண்ட்பிரி அங்குள்ள சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இந்த நிலையில் திடீர் பின்னடைவாக பார்முலா1 கார்பந்தய வீரர் செர்ஜியோ பெரேஸ் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த செர்ஜியோ பெரேஸ், ரேசிங் பாயிண்ட் அணிக்காக கார் ஓட்டுகிறார். இதையடுத்து 4-வது சுற்றில் இருந்து விலகியுள்ள அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். அவருடன் நெருக்கமாக இருந்த அவரது அணியைச் சேர்ந்த சிலரும் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

முதல்முறையாக பார்முலா1 கார்பந்தய வீரர் கொரோனாவில் சிக்கி இருந்தாலும் பிரிட்டிஷ் கிராண்ட்பிரி சுற்று திட்டமிட்டபடி நடைபெறும் என்று போட்டி அமைப்பு குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

30 வயதான செர்ஜியோ பெரேஸ் முதல் இரண்டு சுற்றில் 6-வது இடத்தையும், 3-வது சுற்றில் 7-வது இடத்தையும் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது சுற்று முடிந்ததும் ஹங்கேரியில் இருந்து தனியார் விமானத்தில் மெக்சிகோவுக்கு கிளம்பிய செர்ஜியோ பெரேஸ், அங்கு விபத்தில் சிக்கி காயமடைந்த தனது தாயாரை பார்க்க ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். அப்போது கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும், ஆனால் அறிகுறி எதுவும் தெரியவில்லை என்றும் செர்ஜியோ பெரேஸ் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் ‘எனது விளையாட்டு வாழ்க்கையில் மிகவும் சோகமான நாட்களில் இதுவும் ஒன்று. இந்த போட்டிக்காக நான் 100 சதவீதம் தயாராகி இருந்தேன். இதில் களம் இறங்க முடியாமல் போவது ஏமாற்றம் அளிக்கிறது. எனக்கு ஆதரவாக உள்ள எனது அணியினர், ரசிகர்களுக்கு நன்றி. நிச்சயம் இது கடினமான தருணம் தான். ஆனால் பாதிப்பில் இருந்து குணமடைந்து வலுவான வீரராக மீண்டும் வருவேன்’ என்றார்.

இங்கிலாந்தின் சுகாதார வழிகாட்டுதலின்படி செர்ஜியோ பெரேஸ் 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். இதனால் அவர் பிரிட்டிஷ் கிராண்ட்பிரி மட்டுமின்றி அடுத்த வாரம் நடக்கும் 5-வது சுற்றிலும் பங்கேற்க முடியாது. அவருக்கு பதிலாக நிகோ ஹல்கென்பெர்க் (ஜெர்மனி) களம் காணுவார் என்று ரேசிங் பாயிண்ட் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story