துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 2 Aug 2020 11:31 PM GMT (Updated: 2 Aug 2020 11:31 PM GMT)

இங்கிலாந்து அணியில் இருந்து திடீரென நீக்கப்பட்டதால் கோபத்தில் ஓய்வு பெறுவது குறித்து 100 சதவீதம் சிந்தித்ததாக வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கூறியுள்ளார்.

* தோகா ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த கோமதி ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால் 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டதுடன் பதக்கமும் பறிக்கப்பட்டது. தான் ஊக்கமருந்து ஒரு போதும் பயன்படுத்தவில்லை என்று மறுத்த கோமதி தடையை எதிர்த்து விளையாட்டுக்கான தீர்ப்பாயத்தில் அப்பீல் செய்துள்ளார்.

* வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இருந்து திடீரென நீக்கப்பட்டதால் கோபத்தில் ஓய்வு பெறுவது குறித்து 100 சதவீதம் சிந்தித்ததாக வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கூறியுள்ளார். அதன் பிறகு எஞ்சிய இரு டெஸ்டில் ஆடிய பிராட் மொத்தம் 16 விக்கெட் கைப்பற்றியதுடன், 500 விக்கெட் இலக்கையும் கடந்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

* கடந்த ஆண்டு நடந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய தொடக்க வீரர் ரோகித் சர்மா 5 சதங்கள் நொறுக்கி சாதனை படைத்தார். அந்த 5 சதங்களில் உங்களுக்கு பிடித்தமான சதம் எது என்று டுவிட்டர் மூலம் ரசிகர் ஒருவர் ரோகித் சர்மாவிடம் கேட்ட போது ‘தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அடித்த சதத்தை (122 ரன்) சொல்வேன். அந்த உலக கோப்பையில் அது தான் எங்களது முதல் ஆட்டம். இலக்கு குறைவு தான் என்றாலும், சீதோஷ்ண நிலை சவாலாக இருந்தது. அது மட்டுமின்றி அவர்களின் பந்து வீச்சும் அபாரமாக இருந்தது’ என்று பதில் அளித்தார். ‘எனது முதலாவது இரட்டை சதத்தை அடித்த போது எதிர்முனையில் டோனி நின்றார். டோனியுடன் எனது சிறந்த தருணம் அது’ என்று மற்றொரு கேள்விக்கு ரோகித் சர்மா கூறினார்.

* சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சீனிவாசன் அளித்த பேட்டியில், ‘திறமைமிக்க அருமையான வீரர் ஒருவரை சென்னை அணியில் சேர்ப்பது குறித்து கேப்டன் டோனியிடம் நாங்கள் யோசனை கேட்டோம். அதற்கு டோனி, அந்த வீரர் வேண்டாம். அந்த வீரர் அணியின் கட்டுக்கோப்பை சீர்குலைத்து விடுவார் என்று கூறினார்’ என்றார். குறிப்பிட்ட அந்த வீரரின் பெயரை தெரிவிக்கவில்லை.

* இத்தாலியில் நடந்த சீரி ஏ கிளப் கால்பந்து போட்டியில் கிறிஸ்டியானா ரொனால்டோவை உள்ளடக்கிய யுவென்டஸ் அணி ஏற்கனவே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் அந்த அணி நேற்று முன்தினம் நடந்த கடைசி லீக்கில் 1-3 என்ற கோல் கணக்கில் ரோமா அணியிடம் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தில் ரொனால்டோவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. யுவென்டஸ் 83 புள்ளிகளுடன் முதலிடத்தையும், இன்டர்மிலன் 82 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் பிடித்தன.

Next Story