சென்னை சூப்பர் கிங்சை சந்திக்க ஆர்வமுடன் காத்திருக்கிறேன்; ஐதராபாத் அணி வீரர் விஜய் சங்கர் பேட்டி


சென்னை சூப்பர் கிங்சை சந்திக்க ஆர்வமுடன் காத்திருக்கிறேன்; ஐதராபாத் அணி வீரர் விஜய் சங்கர் பேட்டி
x
தினத்தந்தி 15 Sep 2020 11:38 PM GMT (Updated: 15 Sep 2020 11:38 PM GMT)

சென்னை சூப்பர் கிங்சை சந்திக்க ஆர்வமுடன் காத்திருக்கிறேன் என ஐதராபாத் அணி வீரர் விஜய் சங்கர் பேட்டியில் கூறியுள்ளார்.

துபாய்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடும் ஆல்-ரவுண்டர் தமிழகத்தை சேர்ந்த 29 வயதான விஜய் சங்கர் அளித்த ஒரு பேட்டி:-

கேள்வி: 2020-ம் ஆண்டு ஐ.பி.எல்-ல் எந்த அணியை சந்திக்க நீங்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்நோக்கி இருக்கிறீர்கள்?

பதில்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஏனெனில் நான் சென்னையைச் சேர்ந்தவன். அது மட்டுமின்றி சென்னை அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடும் போது எப்போதும் மகிழ்ச்சியான உணர்வை தரும்.

கேள்வி: உங்களது அணியின் மிகப்பெரிய பலம் என்ன?

பதில்: எப்போதுமே எங்கள் அணியின் பலம் பந்து வீச்சு மற்றும் டாப் வரிசை பேட்டிங் தான்.

கேள்வி: இந்த ஐ.பி.எல்.-ல் உங்களது தனிப்பட்ட லட்சியம் என்ன?

பதில்: பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் எனக்கு எத்தகைய வாய்ப்பு வழங்கப்பட்டாலும் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்காக முயற்சிக்க வேண்டும். அது தான் இலக்கு.

கேள்வி: ஐ.பி.எல்.-ல் எந்த சாதனையை உடைக்க விரும்புகிறீர்கள்.

பதில்: உங்களுக்கு தெரியுமா? ஏற்கனவே ஐ.பி.எல்.-ல் ஒரு சாதனை என் வசம் உள்ளது. ஐ.பி.எல்.-ல் 29 இன்னிங்சில் டக்-அவுட் இன்றி விளையாடி இருக்கிறேன். இது டக்-அவுட் இன்றி அதிக இன்னிங்சை விளையாடிய இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையாகும்.

கேள்வி: ஐ.பி.எல்.-ல் உங்களது சிறந்த ஆட்டம் எது?

பதில்: 2017-ம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக ஆட்டம் இழக்காமல் எடுத்த 63 ரன்கள். எனது ஐ.பி.எல். வாழ்க்கையில் முக்கியமான இன்னிங்ஸ் அது.  இவ்வாறு அவர் கூறினார்.

ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி அக்டோபர் 2 மற்றும் 13-ந்தேதிகளில் சென்னை அணியுடன் மோத உள்ளது.

Next Story