விளையாட்டு துளிகள்


விளையாட்டு துளிகள்
x
தினத்தந்தி 8 Oct 2020 9:56 PM GMT (Updated: 8 Oct 2020 9:56 PM GMT)

டெல்லியில் உள்ள கர்னிசிங் துப்பாக்கி சுடுதல் ரேஞ்சில் வருகிற 15-ந் தேதி முதல் டிசம்பர் 14-ந் தேதி வரை நடைபெறும் என்று இந்திய விளையாட்டு ஆணையம் நேற்று அறிவித்தது.

* அபுதாபியில் நேற்று முன்தினம் இரவு நடந்த கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 12.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்த சென்னை அணி இறுதியில் 5 விக்கெட்டுக்கு 157 ரன்களே எடுத்து தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் கேதர் ஜாதவ் 12 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 7 ரன்கள் எடுத்த மந்தமான ஆட்டம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. ரவீந்திர ஜடேஜாவுக்கு முன்பு கேதர் ஜாதவை களம் இறக்கியது தவறு என்றும் கூறப்பட்டது. இது குறித்து சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கிடம் கேட்ட போது, ‘கேதர் ஜாதவ் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் திறன் உடையவர் என்பதால் தான் ஜடேஜா, பிராவோ ஆகியோருக்கு முன்பாக களம் இறக்கப்பட்டார். ஜடேஜா களம் இறங்கி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து கொடுப்பார் என்று நினைத்தோம். ஆனால் கடைசி நேரத்தில் அதிக ரன் தேவையாக இருந்ததால் அதனை எடுக்க முடியாமல் போய்விட்டது’ என்றார்.

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘20 ஓவர் கிரிக்கெட் போட்டி நன்றாக சென்று கொண்டு இருக்கிறது. எனவே அதன் விதிமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் இந்த ஆட்டம் பேட்ஸ்மேனுக்கு கூடுதல் அனுகூலமாக இருக்கிறது என்பது உண்மை தான். எனவே வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு ஓவரில் 2 பவுன்சர் வீச அனுமதிக்கலாம். முதல் 3 ஓவர்களில் விக்கெட் எடுக்கும் பவுலருக்கு கூடுதலாக ஒரு ஓவர் பந்து வீச வாய்ப்பு அளிப்பது குறித்து பரிசீலனை செய்யலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

* டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர், வீராங்கனைகளுக்கான தேசிய பயிற்சி முகாம் டெல்லியில் உள்ள கர்னிசிங் துப்பாக்கி சுடுதல் ரேஞ்சில் வருகிற 15-ந் தேதி முதல் டிசம்பர் 14-ந் தேதி வரை நடைபெறும் என்று இந்திய விளையாட்டு ஆணையம் நேற்று அறிவித்தது. இதில் 18 வீரர்கள், 14 வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த முகாம் ரூ.1 கோடியே 43 லட்சம் செலவில் நடத்தப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த பயிற்சி முகாம் ஏற்கனவே 2 முறை தள்ளிவைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

* சர்வதேச பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. இதில் ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மெக் லானிங் 4 இடங்கள் முன்னேறி மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2 ஆட்டங்களில் விளையாடி சதம் உள்பட 163 ரன்கள் எடுத்ததன் மூலம் அவர் 5-வது முறையாக முதலிடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.

Next Story