உலக கோப்பை குத்துச்சண்டை - துளிகள்


உலக கோப்பை குத்துச்சண்டை - துளிகள்
x
தினத்தந்தி 18 Dec 2020 10:30 PM GMT (Updated: 18 Dec 2020 8:08 PM GMT)

உலக கோப்பை குத்துச்சண்டை போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.

பெண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித் கவுர் 4-1 என்ற கணக்கில் மரியன்னா பாசானெட்டை (உக்ரைன்) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 57 கிலோ பிரிவின் கால்இறுதியில் இந்திய வீராங்கனை சோனியா லாதெர் 3-2 என்ற கணக்கில் உக்ரைனின் நிஸ்ஹனாவை சாய்த்து அரைஇறுதிக்குள் நுழைந்தார். ஆண்கள் பிரிவில் சதீஷ் குமார் (91 கிலோ), முகமது ஹூசாமுதீன் (57 கிலோ), கவுரவ் சோலங்கி, கவிந்தர் சிங் பிஸ்த் ஆகியோர் அரைஇறுதிக்கு தகுதி பெற்றனர்.


* 6 அணிகள் இடையிலான முதலாவது பிரிமீயர் ஹேண்ட்பால் லீக் போட்டி ஜெய்ப்பூரில் வருகிற 24-ந் தேதி தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராததால் வீரர்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த போட்டியை அடுத்த ஆண்டின் முதல் பாதிக்கு தள்ளிவைப்பதாக இந்திய ஹேண்ட்பால் சம்மேளனம் அறிவித்துள்ளது.

* ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் 4-வது 10 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜனவரி) 28-ந் தேதி முதல் பிப்ரவரி 6-ந் தேதி வரை நடக்கிறது. இந்த ஆண்டுக்கான போட்டியில் புனே டெவில்ஸ் அறிமுக அணியாக இடம் பெறுகிறது. புனே டெவில்ஸ் அணியின் பயிற்சியாளராக ஜான்டிரோட்ஸ் (தென்ஆப்பிரிக்கா) நியமிக்கப்பட்டுள்ளார்.


* அடுத்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் தாய்லாந்து மற்றும் பாங்காக்கில் நடைபெறும் 3 சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் கலந்து கொள்ளும் போது தன்னுடன் தனிப்பட்ட பிசியோதெரபிஸ்ட் மற்றும் உடல் தகுதி நிபுணரை அழைத்து செல்ல அனுமதிப்பதுடன் அவர்களுக்குரிய கட்டணத்தை வழங்க வேண்டும் என்று உலக சாம்பியனான இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதனை இந்திய விளையாட்டு ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.

Next Story