மும்பையில் நடைபெற்ற 24 மணி நேர ஸ்டேடியம் மாரத்தான் ஓட்டத்தில் 23 ஆண்களை வீழ்த்தி 44 வயதான பெண் ஒருவர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
மும்பை
மும்பையில் ஏஜியாஸ் பெடரல் லைப் இன்சூரன்ஸ் சார்பில் 24 மணி நேர மாரத்தான் நடைபெற்றது. பல்கலைக்கழக மைதானம் ஒன்றில் நடத்தப்பட்ட போட்டியில் ஒரு பெண் மற்றும் 23 ஆண்கள் என மொத்தம் 24 பேர் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் பங்கேற்ற மும்பையைச் சேர்ந்த யோகா ஆசிரியை பிரீத்தி லாலா, 193.60 கிலோ மீட்டர் ஓடி, போட்டியாளர்களாக பங்கேற்ற அனைத்து ஆண்களையும் வீழ்த்தி முதல் இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் இந்தியாவில் நடைபெற்ற 24 மணி நேர ஸ்டேடியம் ரன் மாரத்தானில் வெற்றிப் பெற்ற முதல் பெண் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இந்தப் போட்டியில் 154 கிலோ மீட்டர் ஓடிய பர்விந்தர் சிங் 2வது இடத்தை பிடித்தார். முதல் இடம் பிடித்த பிரீத்தி லாலா, 2வது இடம் பிடித்த பர்விந்தர் சிங்கைவிட 39 கிலோ மீட்டர் அதிகமாக ஓடினார்.
அதிகாலை நேரம் 1 மணி முதல் 4 மணி வரை தூக்கமின்மை, அனைத்து போட்டியாளர்களையும் பாடாய் படுத்தியது. 12 மணி நேரத்தில் 100 கிலோ மீட்டரை கடந்தவுடன், மேற்கொண்டு 50 கிலோ மீட்டர் வரை நடந்தோ அல்லது மெதுவாக ஓடி கடந்துவிட முடியும் என்ற நம்பிக்கை வந்தது.
தான் ஒரு தடகள வீராங்கனையாக மாறுவேன் என சிறுவயதில் ஒரு போதும் எண்ணியதில்லை. பள்ளியில் விளையாட்டு நாள் கொண்டாடப்பட்டால், அது தனக்கு ஒரு விடுமுறை நாள். பெண் குழந்தையை பெற்றெடுத்த பிறகு உடல்நலம் மீது அக்கறை கொள்ளத் தொடங்கினேன். அப்போதிலிருந்து, ஓட்டப்பந்தயம் மற்றும் பிட்னஸூக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்ததாகவும் பிரீத்தி லாலா தெரிவித்தார்.