தேசிய சீனியர் தடகளம்: ஈட்டி எறிதலில் அன்னு ராணி புதிய சாதனை
24-வது பெடரேஷன் கோப்பைக்கான தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நேற்று தொடங்கியது.
பாட்டியாலா,
24-வது பெடரேஷன் கோப்பைக்கான தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நேற்று தொடங்கியது. இதில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 28 வயது வீராங்கனை அன்னு ராணி 63.24 மீட்டர் தூரம் வீசி புதிய தேசிய சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கத்தையும் தனதாக்கினார். இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு தோகாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் 62.43 மீட்டர் தூரம் எறிந்ததே தேசிய சாதனையாக இருந்தது. நேற்று அவர் தனது சொந்த சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார். இருப்பினும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி இலக்கை (64 மீட்டர்) அவரால் எட்ட முடியவில்லை. இந்த பந்தயத்தில் ராஜஸ்தான் வீராங்கனை சஞ்சனா சவுத்ரி (54.55 மீட்டர்) 2-வது இடமும், அரியானா வீராங்கனை குமாரி ஷர்மிளா (50.78 மீட்டர்) 3-வது இடமும் பெற்றனர். பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் உத்தரபிரதேச வீராங்கனை சவிதா பாலும், குண்டு எறிதலில் உத்தரபிரதேச வீராங்கனை கிரண் பாலியானும் முதலிடம் பிடித்தனர்.
Related Tags :
Next Story