உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் இன்று தொடக்கம்


உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 19 March 2021 3:05 AM GMT (Updated: 19 March 2021 3:05 AM GMT)

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் (ரைபிள், பிஸ்டல், ஷாட்கன்) போட்டி டெல்லியில் இன்று தொடங்கி 29-ந் தேதி வரை நடக்கிறது.

புதுடெல்லி, 

கொரோனா பரவல் காரணமாக ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்தியாவில் நடைபெறும் முதல் சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி இதுவாகும். இதில் வீரர், வீராங்கனைகள் குவிக்கும் புள்ளிகள் அடிப்படையில் உலக தரவரிசையில் முன்னேற்றம் காண்பதுடன், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற முடியும் என்பதால் இந்த போட்டி அனைத்து வீரர்களுக்கும் முக்கியமானதாகும்.

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக பலம் வாய்ந்த சீனா, ஜப்பான் நாட்டு வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை. இருப்பினும் கொரியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து, ஈரான், உக்ரைன், பிரான்ஸ், அங்கேரி, இத்தாலி, தாய்லாந்து, துருக்கி உள்பட 53 நாடுகளை சேர்ந்த 294 வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொள்கிறார்கள். போட்டியை நடத்தும் இந்தியா சார்பில் 57 பேர் கொண்ட வலுவான அணி களம் காணுகிறது. இதில் ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள 15 வீரர்-வீராங்கனைகளும் அடங்குவார்கள்.

தொடக்க நாளான இன்று நடைபெறும் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில் இந்திய வீரர்கள் திவ்யனாஷ் சிங் பன்வார், அர்ஜூன் பாபுதா, தீபக்குமார் ஆகியோரும், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில் இந்திய வீராங்கனைகள் இளவேனில் வாலறிவன், அஞ்சும் மோட்ஜில், அபூர்வி சண்டிலா ஆகியோரும் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

Next Story