உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: விஜய்வீர்-தேஜஸ்வானி ஜோடிக்கு தங்கம்


உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: விஜய்வீர்-தேஜஸ்வானி ஜோடிக்கு தங்கம்
x
தினத்தந்தி 27 March 2021 10:30 PM GMT (Updated: 27 March 2021 10:30 PM GMT)

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் விஜய்வீர்-தேஜஸ்வானி ஜோடி வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.

புதுடெல்லி, 

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 53 நாடுகளை சேர்ந்த 294 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் 9-வது நாளான நேற்று நடந்த 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் விஜய்வீர் சித்து-தேஜஸ்வானி ஜோடி, சக நாட்டு இணையான குர்பிரீத் சிங்-அசோக் அபித்யா பட்டீலை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய விஜய்வீர் சித்து-தேஜஸ்வானி ஜோடி 9-1 என்ற கணக்கில் எளிதில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. 

விஜய்வீர் சித்து கைப்பற்றிய 2-வது பதக்கம் இதுவாகும். அவர் 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் பந்தயத்தின் தனிநபர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார்.

9-வது நாள் போட்டிகள் முடிவில் இந்தியா 13 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அமெரிக்கா 3 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 2-வது இடத்திலும், இத்தாலி 2 தங்கம், 2 வெண்கலத்துடன் 3-வது இடத்திலும் உள்ளது.

Next Story