விமான சேவை திடீர் ரத்து: ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியை தவற விடும் இந்திய தடகள அணி


விமான சேவை திடீர் ரத்து: ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியை தவற விடும் இந்திய தடகள அணி
x
தினத்தந்தி 29 April 2021 12:12 AM GMT (Updated: 29 April 2021 12:12 AM GMT)

விமான சேவை திடீர் ரத்து செய்யப்பட்டதால் ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியை தவற விடும் இந்திய தடகள அணியினர் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி, 
உலக தடகள தொடர் ஓட்ட சாம்பியன்ஷிப் போட்டி போலந்து நாட்டில் உள்ள சிலிசியாவில் மே 1 மற்றும் 2-ந் தேதிகளில் நடக்கிறது. இது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று போட்டியாகும். இந்த போட்டியில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும். இந்த தகுதி சுற்று போட்டியில் பெண்களுக்கான 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஹிமா தாஸ், டுட்டீ சந்த், தனலட்சுமி (தமிழ்நாடு), அர்ச்சனா சுசீந்திரன், தனேஷ்வரி, ஹிமாஸ்ரீ ராய் ஆகியோர் அடங்கிய இந்திய அணியும், ஆண்களுக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முகமது அனாஸ், ஆரோக்ய ராஜீவ் (தமிழ்நாடு), அமோஜ் ஜேக்கப், நிர்மல் நோக் டாம், சர்தாக் பாம்ப்ரி ஆகியோர் அடங்கிய இந்திய அணியும் கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்தது. 

இந்திய அணியினர் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் இருந்து ஆம்ஸ்டர்டாம் (நெதர்லாந்து) வழியாக செல்லும் விமானம் மூலம் போலந்து செல்ல டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து இருந்தனர். ஆனால் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு நெதர்லாந்து அரசு திடீரென தடை விதித்துள்ளது. இதனால் டெல்லியில் இருந்து ஆம்ஸ்டர்டாம் செல்ல வேண்டிய விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே ஒலிம்பிக் தகுதி சுற்று உலக தொடர் ஓட்ட பந்தயத்தில் இந்திய அணியினர் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய தடகள சம்மேளன தலைவர் சுமரிவாலா கூறுகையில் ‘இந்த தருணத்தில் நாங்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளோம். இந்தியாவில் இருந்து போலந்துக்கு நேரடி விமான போக்குவரத்து எதுவும் கிடையாது. மாற்று விமானங்கள் மூலம் இந்திய அணியை அனுப்ப எடுத்த முயற்சிகளுக்கு இதுவரை பலன் கிடைக்கவில்லை. கடந்த 24 மணி நேரமாக இந்த பயணத்துக்கான மாற்று வழியை கண்டுபிடிக்க நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். 

போட்டி அமைப்பாளர்கள், உலக தடகள சம்மேளனம் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் விமான நிறுவனங்களிடம் எல்லாம் கலந்து ஆலோசித்து விட்டோம். தற்போதைய சூழ்நிலையில் யாரிடம் இருந்தும் எங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை’ என்றார்.

Next Story