இந்திய குத்துச்சண்டை நிர்வாகி கொரோனாவுக்கு பலி


இந்திய குத்துச்சண்டை நிர்வாகி கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 4 May 2021 10:59 PM GMT (Updated: 4 May 2021 10:59 PM GMT)

இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் செயல் இயக்குனராக ஆர்.கே.சச்செட்டி நீண்ட காலம் பணியாற்றி வந்தார்.

சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் ஆஸ்பத்திரியில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சச்செட்டி நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 56. இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய குத்துச்சண்டை சம்மேளனம், அவரது மறைவால் விளையாட்டு உலகில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.

‘கடந்த சில ஆண்டுகளில் இந்திய குத்துச்சண்டை மிக உயர்ந்த இடத்தை எட்டியிருக்கிறது என்றால் அதற்கு அவரது அளப்பரிய பங்களிப்பு முக்கிய காரணம். நாங்கள் மட்டுமின்றி குத்துச்சண்டை விளையாட்டே அவரை தவற விடுகிறது’ என்று இந்திய குத்துச்சண்டை சங்க தலைவர் அஜய் சிங் புகழாரம் சூட்டியுள்ளார். இதே போல் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம், சர்வதேச குத்துச்சண்டை சங்கமும் இரங்கல் தெரிவித்துள்ளது.


Next Story