டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 75 சதவீத வீரர், வீராங்கனைகள் கொரோனா தடுப்பூசி போட்டு இருப்பார்கள் - சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச் சொல்கிறார்


டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 75 சதவீத வீரர், வீராங்கனைகள் கொரோனா தடுப்பூசி போட்டு இருப்பார்கள் - சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச் சொல்கிறார்
x
தினத்தந்தி 19 May 2021 11:10 PM GMT (Updated: 19 May 2021 11:10 PM GMT)

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளில் 75 சதவீதம் பேர் நிச்சயம் கொரோனா தடுப்பூசி போட்டு இருப்பார்கள் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச் கூறியுள்ளார்.

டோக்கியோ,

32-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை அரங்கேறுகிறது. இதில் 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியும் அங்கேயே ஆகஸ்டு 24-ந்தேதி முதல் செப்டம்பர் 5-ந்தேதி வரை நடக்க இருக்கிறது.

கடந்த ஆண்டு நடக்க இருந்த இந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா அச்சத்தால் இந்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டு இன்னும் 64 நாட்களில் தொடங்க உள்ளன. ஒலிம்பிக் போட்டிக்காக ஜப்பான் அரசாங்கம் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது.

ஆனால் கொரோனா தாக்கம் மறுபடியும் எகிறி வருவதால் ஜப்பானில் பெரும்பாலான மக்கள் ஒலிம்பிக் போட்டியை நடத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனாலும் அனைத்து விதமான கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு அம்சங்களுடன் ஒலிம்பிக்கை திட்டமிட்டபடி நடத்த ஒலிம்பிக் கமிட்டியும், ஜப்பான் அரசும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன. கொரோனா பரவலால் இந்த தடவை வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.

இந்த நிலையில் ஒலிம்பிக் ஏற்பாடுகள் குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச், உள்ளூர் போட்டி ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், ‘கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு கமிட்டிக்கு கூடுதலாக மருத்துவ ஆலோசகர்களை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும்.

ஒலிம்பிக் கிராமம் பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும். ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் பாதுகாப்பான வழிகளில் நடைபெற வேண்டும் என்பதே எங்களது பிரதான நோக்கமாகும். ஒலிம்பிக் போட்டிக்கு வரும் வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், அதிகாரிகள் ஒலிம்பிக் கிராமத்தில் தங்குவார்கள். அவர்களில் தற்போதைய தருணத்தில், 75 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டு இருப்பாா்கள் அல்லது ஒலிம்பிக் போட்டிக்குள் போட்டு இருப்பார்கள் என்று கருதுகிறேன். இந்த எண்ணிக்கை 80 சதவீதத்துக்கு மேல் உயர்வதற்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக நம்புகிறேன்.

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் வீரா், வீராங்கனைகள் கடும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். தனிமைப்படுத்துதல், தினமும் கொரோனா பரிசோதனை, வெளியில் சுற்ற தடை, உள்ளூர் மக்களுடன் தொடர்பு கொள்ள அனுமதி மறுப்பு இப்படி நிறைய தியாகங்களை செய்ய தயாராக இருக்க வேண்டும். ஏனெனில் பாதுகாப்பே முதலில் முக்கியம். ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கு இன்னும் 64 நாட்களே உள்ள நிலையில் ஒலிம்பிக்கை பாதுகாப்பாக நடத்துவதில் நமது முழு கவனமும் இருக்க வேண்டும்’ என்றார்.

Next Story