ஆசிய குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க இந்திய அணி துபாய் சென்றது கொரோனா பாதிப்பால் கடைசி ேநரத்தில் வினோத் தன்வார் விலகல்


ஆசிய குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க இந்திய அணி துபாய் சென்றது கொரோனா பாதிப்பால் கடைசி ேநரத்தில் வினோத் தன்வார் விலகல்
x
தினத்தந்தி 22 May 2021 11:03 PM GMT (Updated: 22 May 2021 11:03 PM GMT)

ஆசிய குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க இந்திய அணி துபாய் போய் சேர்ந்தது.

புதுடெல்லி, 

ஆசிய குத்துச்சண்ைட சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நாளை (திங்கட்கிழமை) முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றுள்ள அமித் பன்ஹால் (52 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (69 கிலோ), ஆஷிஷ் குமார் (75 கிலோ) உள்பட 10 வீரர்கள், ஆறு முறை உலக சாம்பியனான மேரிகோம் (51 கிலோ), லவ்லினா போர்கோஹைன் (69 கிலோ), சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ), பூஜா ராணி (75 கிலோ) உள்பட 10 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். இந்த போட்டிக்கான இந்திய குத்துச்சண்டை அணி நேற்று ெடல்லியில் இருந்்து தனி விமானம் மூலம் துபாய் போய் சேர்ந்தது. முன்னதாக, இந்திய அணியினர் சென்ற விமானம் தரை இறங்குவதற்கான அனுமதி நடைமுறையில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் விமானம் வானத்தில் வட்டமடிக்க வேண்டியதானது. அதன் பிறகு அனுமதி கிடைத்ததும் அவசரமாக தரைஇறங்கியது. நிர்வாக நடைமுறைகள் அனைத்தும் முடிந்து இந்திய அணியினர் 2 மணி நேர தவிப்புக்கு பிறகு தான் விமானத்தில் இருந்து வெளியேற முடிந்தது. கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரத்துகக்கு விமானங்கள் வர அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதனால் அனுமதி பெற்று தான் அந்த நாட்டுக்கு இந்திய விமானங்கள் செல்ல முடியும். அந்த அனுமதி விஷயத்தில் ஏற்பட்ட குழப்பம் தான் விமானம் தரை இறங்குவதில் ஏற்பட்ட தாமதத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்திய அணியினர் இரண்டு கொரோனா பரிசோதனை முடிந்து துபாய் ஓட்டலுக்கு சென்று விட்டதாகவும், அனைத்து அனுமதிகளும் முறையாக பெற்று தான் இந்திய அணியினர் சென்ற விமானம் துபாய் போனதாகவும் விளக்கம் அளித்துள்ள இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி பங்கேற்க ஒப்புதல் கிடைப்பதில் ஏற்பட்ட பிரச்சினையில் உதவிய இந்திய தூதரகம், ஆசிய குத்துச்சண்டை கூட்டமைப்பு, ஐக்கிய அரபு அமீரக அரசு ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

இதற்கிடைேய, இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த வீரர் வினோத் தன்வாருக்கு (49 கிலோ) கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் கடைசி நேரத்தில் இந்த போட்டியில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக மாற்று வீரர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை. 23 வயதான வினோத் தன்வார் 2019-ம் ஆண்டில் நடந்த தெற்காசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் ஆவார்.


Next Story