கொலை வழக்கில் கைதான மல்யுத்த வீரர் சுஷில்குமாரை பணியிடை நீக்கம் செய்ய ரெயில்வே முடிவு
ஒலிம்பிக்கில் இருமுறை பதக்கம் வென்றவரான மல்யுத்த வீரர் சுஷில்குமார், வடக்கு ரெயில்வேயில் முதுநிலை வர்த்தக மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.
இவரை, பள்ளி அளவில் விளையாட்டை மேம்படுத்துவதற்காக சிறப்பு பணி அதிகாரியாக சாத்ரசால் விளையாட்டரங்கில் டெல்லி அரசு நியமித்திருந்தது. இந்நிலையில் கடந்த 4-ந் தேதி நடந்த தகராறில், சுஷில்குமார் உள்ளிட்டோரால் தாக்கப்பட்ட சக மல்யுத்த வீரர் சாகர் ராணா இறந்துவிட்டார். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த சுஷில்குமார் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ‘மல்யுத்த வீரர் சுஷில்குமார் மீதான வழக்கு குறித்த அறிக்கையை ரெயில்வே வாரியத்துக்கு டெல்லி அரசு நேற்று அனுப்பியிருக்கிறது. அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே அவர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்’ என வடக்கு ரெயில்வே செய்தித் தொடர்பாளர் நேற்று தெரிவித்தார்.
சுஷில்குமாரை பணியிடை நீக்கம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு இரண்டொரு நாட்களில் வழங்கப்படும் என்று வடக்கு ரெயில்வே அதிகாரிகள் கூறினர்.
Related Tags :
Next Story