ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 15 பதக்கங்கள் உறுதி; அமித், ஷிவதபா அசத்தல்


ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 15 பதக்கங்கள் உறுதி; அமித், ஷிவதபா அசத்தல்
x
தினத்தந்தி 27 May 2021 2:52 AM GMT (Updated: 27 May 2021 2:52 AM GMT)

ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 15 பதக்கங்கள் உறுதியாகி இருந்தது. இந்திய முன்னணி வீரர்கள் அமித் பன்ஹால், ஷிவதபா அரைஇறுதிக்கு முன்னேறி பிரமாதப்படுத்தினர்.

ஷிவதபாவுக்கு 5-வது பதக்கம்
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது. 31-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் உள்பட 17 நாடுகளை சேர்ந்த 150 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்களுக்கான 64 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீரர் ஷிவதபா 5-0 என்ற கணக்கில் குவைத் வீரர் நாடிர் ஒடாக்கை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் அவர் குறைந்தபட்சம் வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்தார். 27 வயதான அசாமை சேர்ந்த ஷிவதபா ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ந்து 5-வது முறையாக பதக்கம் வெல்கிறார். அவர் ஏற்கனவே 2013-ம் ஆண்டில் தங்கமும், 2015, 2019-ம் ஆண்டுகளில் வெண்கலமும், 2017-ம் ஆண்டில் வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றி இருந்தார். 
இதேபோல் 91 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீரர் சஞ்சீத் 5-0 என்ற கணக்கில் தஜிகிஸ்தானின் ஜாசுர் குர்போனோவை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்ததுடன் பதக்கத்தையும் உறுதி செய்தார்.இ்ந்தியாவின் ஆதிக்கம் நேற்றும் நீடித்தது. நடப்பு சாம்பியன் அமித் பன்ஹால் (52 கிலோ) 3-2 என்ற கணக்கில் கார்கு இங்க்மன்டாக்கை (மங்கோலியா) சாய்த்து அரைஇறுதி வாய்ப்பை பெற்றார். விகாஷ் கிருஷ்ணன் (69 கிலோ), வரிந்தர் சிங் (60 கிலோ) ஆகிய இந்திய வீரர்களும் கால்இறுதியில் வெற்றியை சுவைத்தனர்.

இந்திய வீராங்கனைகள் வெற்றி
பெண்களுக்கான 54 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி 5-0 என்ற கணக்கில் ருஹாப்சோவை (தஜிகிஸ்தான்) வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். 57 கிலோ பிரிவின் கால்இறுதியில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் 4-1 என்ற கணக்கில் மங்கோலியாவின் யுன்ட்செட்செக் யேசுஜென்னையும், 60 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்தியாவின் சிம்ரன்ஜித் கவுர் 4-1 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் கோடிரோவாவையும் சாய்த்து அரைஇறுதியை எட்டினர். 3 பேருக்கும் குறைந்தபட்சம் வெண்கலப்பதக்கம் உறுதியாகியுள்ளது.

6 முறை உலக சாம்பியனான மேரிகோம் (51 கிலோ), லால்பாட் சாய்ஹி (64 கிலோ), லவ்லினா (69 கிலோ), பூஜா ராணி (75 கிலோ), மோனிகா (48 கிலோ), சவீட்டி (81 கிலோ), அனுபமா (81 கிலோவுக்கு மேல்) ஆகிய இந்திய வீராங்கனைகள் நேரடியாக அரைஇறுதியில் களம் இறங்குவதால் இவர்களுக்கும் நிச்சயம் பதக்கம் உண்டு. ஆக மொத்தம் 15 பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைப்பது உறுதியாகி இருக்கிறது.

Next Story