ஊக்க மருந்து சோதனையில் இந்திய மல்யுத்த வீரர் சுமித் மாலிக் தோல்வி- ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல்


ஊக்க மருந்து சோதனையில் இந்திய மல்யுத்த வீரர் சுமித் மாலிக் தோல்வி- ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல்
x
தினத்தந்தி 4 Jun 2021 9:06 AM GMT (Updated: 4 Jun 2021 9:06 AM GMT)

ஊக்க மருந்து சோதனையில் இந்திய மல்யுத்த வீரர் சுமித் மாலிக் தோல்வி அடைந்துள்ளார்.

புதுடெல்லி,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இந்தப் போட்டித்தொடர் துவங்க இன்னும் 43 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், இந்தப்போட்டியில் பங்கேற்கும் வீரர் வீராங்கனைகளுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்படுகிறது. 

அந்த வகையில், இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள மல்யுத்த வீரர் சுமித் மாலிக்கிற்கு (125 கிலோ எடைப்பிரிவு நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில்  தோல்வி அடைந்துள்ளார். எனவே, அவர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியுடன் இணையமாட்டார் என தெரிகிறது. 

இதுபற்றி இந்திய மல்யுத்த சம்மேளன உதவி செயலாளர் வினோத் தோமர்  ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,  “ஊக்கமருந்து சோதனையில் சுமித் தோல்வி அடைந்ததால் அவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பு மங்கிவிட்டது. 

சுமித்தின் ‘பி’ மாதிரி ஜூன் 10 ஆம் தேதி சோதனை செய்யப்படும். இப்போதைக்கு அவர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுகிறார். அடுத்தகட்ட சோதனைக்குப் பிறகு, சுமித் மாலிக்கிடம் விசாரணை செய்து முடிவு அறிவிக்கப்படும்.” என்றார்.

ஊக்க மருந்து சோதனையில்  சுமித் மாலிக் தோல்வி அடைந்து இருப்பது இந்திய மல்யுத்த சம்மேளன கூட்டமைப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story