‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு சிறப்பாக தயாராகி வருகிறேன்’ துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மானு பாகெர் பேட்டி


‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு சிறப்பாக தயாராகி வருகிறேன்’ துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மானு பாகெர் பேட்டி
x
தினத்தந்தி 9 Jun 2021 1:13 AM GMT (Updated: 9 Jun 2021 1:13 AM GMT)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு சிறப்பான முறையில் தயாராகி வருகிறேன் என்று இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மானு பாகெர் தெரிவித்தார்.

புதுடெல்லி, 

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் (ஜூலை) 23-ந் தேதி முதல்ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தலால் இந்தியாவில் பயிற்சி முகாம் நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய துப்பாக்கி சுடுதல் அணியை சேர்ந்த 13 வீரர்-வீராங்கனைகள் குரோஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பயிற்சி மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமையை மெருகேற்றி வருகிறார்கள்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று பெருமை சேர்க்கக்கூடிய வீராங்கனையாக கருதப்படும் ஹரியானாவை சேர்ந்த 19 வயது மானு பாகெர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல், 25 மீட்டர் பிஸ்டல் ஆகிய பந்தயங்களில் களம் காண இருக்கிறார். ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுவது குறித்து மானு பாகெர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக குரோஷியா பயணம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. எங்களது உடல் நலன் மற்றும் உடல் தகுதிக்கு தேவையான அனைத்து அம்சங்களும் நன்றாக கவனத்தில் கொள்ளப்படுகிறது. மிகவும் சிறப்பான சூட்டிங் ரேஞ்சில் பயிற்சி பெறுவதுடன், சில நல்ல போட்டிகளிலும் பங்கேற்று வருகிறோம். எனவே ஒலிம்பிக் போட்டிக்கு இதை விட சிறப்பான முறையில் தயாராக முடியாது என்று நான் நம்புகிறேன்.

அணியில் எனக்கு தான் பதக்கம் வெல்ல மிகப்பெரிய அளவில் வாய்ப்பு இருப்பதாக நினைக்கவில்லை. அப்படி நினைத்தால் அது நியாயமற்றதாகும். துப்பாக்கி சுடுதலை பொறுத்தமட்டில் இந்திய அணியில் பதக்கம் வெல்ல வாய்ப்பு இல்லாதவர்கள் யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இேதபோல் பேட்மிண்டன், பளுதூக்குதல், மல்யுத்தம், வில்வித்தை, குத்துச்சண்டை போன்ற போட்டிகளுக்கான இந்திய அணியிலும் உலகத்தரம் வாய்ந்த வீரர், வீராங்கனைகள் உள்ளனர்.

ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் நான் நன்றாக புள்ளிகள் குவித்தேன். இருப்பினும் இன்னும் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன். முதலில் பயிற்சியில் நிலையாக செயல்படுவதில் கவனம் செலுத்துகிறேன். அடுத்து அதனை போட்டியிலும் செயல்படுத்துவேன். ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக எனது மிகச்சிறந்த திறனை வெளிப்படுத்த வேண்டும் என்பதே இலக்கு. இவ்வாறு மானு பாகெர் கூறினார்.

Next Story